விஜய் டிவியில் “கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்துவரும் அமித் பார்கவ், தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனியை சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் அக்மார்க் காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணமாம்.
சின்னத்திரையில் சீரியலில் ஒன்றாக நடிப்பவர்களும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் காதல் திருமணம் செய்து கொள்வது சாதாரண விசயமாகிவிட்டது. மர்மதேசம் ஜோடி சேத்தன் தேவதர்ஷினி தொடங்கி இன்றைக்கு அமித்பார்க்கவ் ஸ்ரீரஞ்சனி திருமணம் வரை பல சின்னத்திரை ஜோடிகள் காதலித்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
அமித் பார்க்கவ் பெங்களூரு பையன், ஸ்ரீரஞ்சனி திருநெல்வேலி பொண்ணு… மீடியா வேலைக்காக சென்னை வந்த இடத்தில் நட்பாக அறிமுகமாகி இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இவர்கள் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவே தற்போது சுற்றமும் நட்பும் புடைசூழ திருமணம் நடந்துள்ளது.
அமித் பார்க்கவ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல்தான் அமித் பார்க்கவ் அடையாளம். இப்போது அச்சம் தவிர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். விஜய் டிவி ரசிகர்களுக்கு இவர் நன்கு அறிமுகமானவர். தொடரில் நடிப்பதோடு, சினிமாவிலும் நடித்து வருகிறார் அமித் பார்கவ்.
ஸ்ரீரஞ்சனி
ஸ்ரீரஞ்சனி புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “கேள்வி பாதி, கிண்டல் பாதி’, “ஆர் யு தி அப்பாடக்கர்?’ ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். இருவருமே ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
கல்யாண பந்தம்
காதலில் விழுந்த இந்த ஜோடி, தற்போது கல்யாண பந்தத்தில் இணைந்துள்ளனர். ஜூன் 16ம் தேதி சுற்றமும் நட்பும் புடை சூழ இவர்கள் திருமணம் நடைபெற்றது. அதே உற்சாகத்தோடு திருமண புகைப்படத்தை தங்களின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
சின்னத்திரை தம்பதிகள்
காதலில் விழுந்த பல சின்னத்திரை ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்தனர். நிஷா கணேஷ் வெங்கட்ராமன், அஞ்சனா கயல் சந்திரன் ஆகியோர் சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்தனர். அந்த வரிசையில் தற்போது அமித் பார்க்கவ், ஸ்ரீரஞ்சனி ஜோடி இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.