ஜி.எஸ்.எம். சேவை நிறுவனங்கள் சங்கத்தின் ஆய்வறிக்கை கூறுவதாவது:- ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், கடந்த ஆண்டு இறுதியில் மொத்தம் 250 கோடி செல்போன் இணைப்புகள் இருந்தது. இது 2020-ஆம் ஆண்டில் 3.1 சதவீத வளர்ச்சி காணும். இந்தியாவில், இதே காலத்தில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 25 கோடி அதிகரிக்கும்.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனா, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணி செல்போன் சந்தைகளாக உள்ளன. மொத்த செல்போன் இணைப்புகளில் இந்த நாடுகளின் பங்கு 75 சதவீதத்திற்கும் அதிமாக இருக்கிறது. இந்நிலையில், வங்காளதேசம், இந்தோனேஷியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தான் போன்ற சிறிய நாடுகளின் பங்களிப்பும் உயர்ந்து வருகிறது. ஆக, சர்வதேச அளவில், 2020-ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பங்கு 60 சதவீதமாக இருக்கும்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பகுதியில் ஸ்மார்ட்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 170 கோடியாக இருந்தது. 2020-ஆம் ஆண்டிற்குள் அது 130 கோடி அதிகரித்து 300 கோடியாக உயரும். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில், சென்ற ஆண்டில் தொடக்கநிலை அல்லது ரூ.10 ஆயிரத்துக்கும் விலை குறைவான ஸ்மார்ட்போன்கள் விற்பனை மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 75 சதவீத பங்கினைக் கொண்டிருந்தது. நடப்பு ஆண்டில், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான ஸ்மார்ட்போன்களின் பங்கு 70 சதவீதமாக இருக்கும் என்றும், இந்த ஆண்டில், ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள் விற்பனை 44 சதவீத வளர்ச்சி காணும் என்றும் முன்னணி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஏராளமான வாடிக்கையாளர்கள் சாதாரண செல்போன்களை விடுத்து ஸ்மார்ட்போன்களுக்கு மாறி வருவதே இதற்கு காரணம் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.