துருக்கியின் இஸ்தான்புல் நகர விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர். 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பயங்கரவாதிகள் விமான நிலையத்துக்கு வாடகைக் காரில் வந்ததாகவும், பயணிகளை நோக்கி தானியங்கித் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுவிட்டு, உடலில் பொருத்தியிருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தின்போது விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன.
அதில், விமான நிலைய நுழைவு வாயிலில் குண்டு வெடிக்கும் காட்சியும், மற்றொரு வீடியோவில் பயணிகளை நோக்கி சுட்டபடி வரும் பயங்கரவாதியை காவலர் ஒருவர் சுட்டு வீழ்த்துவது, கீழே விழுந்த அந்த பயங்கரவாதி தன் உடலில் பொருத்தியிருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்வது ஆகிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.