துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு தற்கொலைப்படை தற்கொலைப்படை திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 36 பேர் உயிர் இழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஹிருத்திக் ரோஷன் தனது மகன்கள் ஹிரேஹான், ஹிரிதான் ஆகியோருடன் தான்சானியா சென்று இருந்தார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்து சுற்றிப் பார்த்தார். பின்னர் தான்சானியாவில் இருந்து விமானத்தில் இந்தியா புறப்பட்டார். இஸ்தான்புல் விமான நிலையத்தில் இறங்கி அவர் இன்னொரு விமானத்தில் ஏற வேண்டும். ஆனால் அந்த விமானத்தை அவர் தவற விட்டு விட்டு விட்டார்.
இஸ்தான்புல் விமான நிலைய ஊழியர்கள் அடுத்த நாள்தான் விமானம் கிடைக்கும் என்றும் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்றும் கூறிவிட்டனர். இதனால் விமான நிலையத்தில் அவர் தவித்தார்.
அப்போது விமான நிலையத்தில் இருந்த இன்னொரு ஊழியர் ஹிருத்திக் ரோஷன் வேறொரு விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்ய உதவினார். அந்த விமானம் மூலம் அவர் இஸ்தான்புல்லில் இருந்து இந்தியா திரும்பினார். அவரது விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் பலியானார்கள்.
இதுகுறித்து ஹிருத்திக் ரோஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
´நான் இஸ்தான்புல் விமான நிலையத்தில் விமானத்தை தவற விட்டு தவித்தபோது அங்குள்ள ஊழியர் இன்னொரு விமானத்தில் சாதாரண வகுப்பில் நான் பயணிக்க உதவினார். அந்த விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் அப்பாவிகள் கொல்லப்பட்டது அறிந்து அதிர்ச்சியானேன். நாம் அனைவரும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று பட்டு நிற்க வேண்டும்.´ இவ்வாறு அவர் கூறி உள்ளார்.