‘நீயா? நானா?’ தலைப்புகளில் உங்க மனசைத் தொட்ட தலைப்பு?
”திருநங்கைகள் பற்றிய ஷோ. ‘திருநங்கைகளை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் மனத் தடை’ என்ற தலைப்பில், திருநங்கைகள் ஒரு பக்கம்… பொதுமக்கள் ஒரு பக்கம் பேசினார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே அவர்களைப் பற்றிய ஒரு மாற்றுப்பார்வையைக் கொடுத்த நிகழ்வு அது.”
வீட்லயும் நீங்க சீரியஸா அறிவுரை சொல்லிட்டே இருப்பீங்களா?
”நான் அவ்ளோ சீரியஸான ஆள் இல்லைங்க. நீயா? நானா? என்பது ஒன் மேன் ஷோ இல்லை. அதுக்குப் பின்னாடி பலரோட சிந்தனை, உழைப்பு இருக்கு. அதை முன்வைக்கும் முகம் மட்டும்தான் நான். அதனால் ஒட்டுமொத்த ‘நீயா? நானா?’ கேரக்டரை என்னிடம் தேடாதீர்கள். பலரும் என்கிட்ட தனிப்பட்ட முறையில் பேசிட்டு, ‘உங்களை வேற மாதிரி நினைச்சேன்’னு சொல்வாங்க. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”
உங்க வீட்டுல ‘நீயா? நானா?’ பார்ப்பாங்களா?
”தலைப்பு பிடிச்சா, ஆர்வமா பாப்பாங்க!”
நீங்க அணியும் கோட்டை வெச்சே உங்களைக் கிண்டல் பண்றாங்களே?
”உண்மை என்னன்னா, என் கல்யாணத்துக்குகூட கோட் போடாதவன் நான். சரியா டை கட்டவும் தெரியாது. ஷோவில் முதுகுப் பக்கத்துல மைக் ரிசீவர் மாட்டியிருப்பேன். கோட் இல்லாம அதை மட்டும் மாட்டியிருந்தா, ஒருமாதிரி உறுத்தும். அதான் கோட். மத்தபடி என்னை வெளியே எங்கேயும் கோட் போட்டுப் பார்க்க முடியாது!”
நீங்க எதனால மீடியாவைத் தேர்ந்தெடுத்தீங்க?
”வேற வழி இல்லாம எல்லாம் தேர்ந்தெடுக்கலை. மீடியாதான் வேணும்னு தேர்ந்தெடுத்தேன். அடிப்படையில் எனக்கு எல்லோருடனும் பழகிக்கொண்டு இருக்கிற மாதிரியான வேலை வேணும். அதுக்கு ஒரே வழி மீடியாதான்!”
நிகழ்ச்சிக்கு நடு நடுவுல போய்த் தரையில உட்கார்ந்துக்கிறீங்க, ஸ்டெப்ஸ்ல உட்கார்ந்துக்கிறீங்களே?
”வேற என்ன பாஸ், கால் வலி தாங்காம உட்கார்ந்திருக்கேன். அது மட்டும் இல்லாம ஒரு நிகழ்ச்சியில நிர்மாணிக்கப்பட்ட கட்டமைப்பு மேல எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒரு நிகழ்ச்சியாளர்னா நேராதான் நிக்கணும்னு இல்லை. அந்தச் சூழ்நிலையை மாற்ற முயற்சி பண்றேன். ஒரு அம்மா அவங்க வீட்டுக் கதையைச் சொல்றாங்கனா நானும் கதை கேட்கிற மாதிரி உட்கார்ந்துக்கிட்டா அவங்களும் வெத்தல பாக்கு போடற மாதிரி சாவகாசமா உட்கார்ந்துக்கிட்டுப் பேசுவாங்க. கம்யூனிகேஷன் என்பது வார்த்தை சார்ந்தது மட்டுமல்ல; எதிரில் பேசறவங்களுக்குச் சுதந்திரமான சூழ்நிலையை உருவாக்கணும்!”
உங்க நிகழ்ச்சி மூலமா பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறீங்க அவங்ககிட்ட இருந்து கற்றுக்கிட்டது என்ன?
”உலகத்துல ஒவ்வொருத்தனும் கெட்டவனாயிட்டான், ஒவ்வொருத்தனும் திருடனாயிட்டான், ஒவ்வொருத்தன் மனசுக்குள்ளேயும் வக்கிரம் படிஞ்சிருக்கு’னு நமக்கு நிறைய தப்பான அபிப்ராயங்கள் இருக்கு. அடிப்படையில அது தப்பு. இன்னைக்கும் நிறைய மனுஷங்களுக்கு ஈரம் இருக்கு. நாட்டுக்கு உழைக்கணும்கிற எண்ணம் இருக்கு. அம்மா அப்பாவைக் காப்பாத்தணும்கிற அக்கறை இருக்கு. மழையில நனையணும்கிற இதயம் இருக்கு. இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்!”