மும்பை அந்தேரியில் வசித்து வருபவர் மிகா சிங் (வயது39). இந்திப்பட பாடகர். இவர் மாடல் அழகி ஒருவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அந்த பாடகர் வீட்டுக்கு மாடல் அழகி அடிக்கடி சென்று வந்துள்ளார். ஆனால் அவர் கூறியபடி மாடல் அழகிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பாடகர் மீது மாடல் அழகி ஆத்திரம் அடைந்தார். இதுபற்றி சம்பவத்தன்று பாடகர் வீட்டுக்கு சென்று கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாடகர் மிகா சிங் மீது மாடல் அழகி மும்பை வெர்சோவா போலீசில் மானபங்க புகார் கொடுத்துள்ளார். அதில் மிகா சிங், தனது தலைமுடியை பிடித்து இழுத்து தள்ளி விட்டதாகவும், தாக்கியதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதன் பேரில் போலீசார் பாடகர் மிகா சிங் மீது மானபங்கம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாடல் அழகியின் இந்த புகாரை பகிரங்கமாக மறுத்துள்ள மிகா சிங் அதே போலீஸ் நிலையத்தில் தன் மீது மாடல் அழகி பொய் புகார் கொடுத்துள்ளதாக புகார் செய்திருக்கிறார்.
மேலும் இதுபற்றி மிகா சிங் கூறுகையில், “சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் சம்பந்தப்பட்ட மாடல் அழகி ஜன்னல் வழியாக எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் என்னை திட்டி, தாக்கவும் செய்தார். இதை தடுக்க முயன்ற எனது வீட்டு வேலைக்காரர்களையும் மிரட்டினார். மேலும் ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், இல்லையெனில் போலீசில் பொய் புகார் கொடுத்து உன் வாழ்க்கையை நாசப்படுத்தி விடுவேன் என்றும் தன்னை மிரட்டினார். இந்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது” என்றார்.