சென்னை குன்றத்தூரில், பிறந்து 5 மாதம் ஆன நாய்க்குட்டியை மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கி கீழே வீசுவது போன்ற வீடியோ படம் ‘வாட்ஸ் அப்’களில் பரவி விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த இளைஞரை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள்.
போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கி நாயை துன்புறுத்திய குற்ற செயலில் ஈடுபட்ட கவுதம் சுதர்சன் மற்றும் அதை வீடியோ படம் எடுத்த அவரது நண்பர் ஆசிஸ்பால் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர்கள் தனியார் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். இருவரும் தற்போது ரூ.5 ஆயிரம் கட்டி ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்கள். நாயிடம் குரூரமாக நடந்துகொண்ட சம்பவத்துக்கு நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “நாய் குட்டியை மாடியில் இருந்து தூக்கி வீசிய குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். அந்த நாய் குட்டி பிழைத்துக்கொண்டதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார். “நீங்கள் பணக்காரரா? ஏழையா? என்பது பற்றி நாய் கவலைப்படுவது இல்லை. அதற்கு தெரிந்தது எல்லாம் உங்களை விரும்புவது மட்டும்தான் என்று நடிகை தீபிகா படுகோனே வெளியிட்ட கருத்தையும் எடுத்து தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் மருத்துவ லைசென்சை ரத்து செய்ய வேண்டும். நாயை காப்பாற்றிய நிஜ ஹீரோக்களுக்கு நன்றி.” என்று கூறியுள்ளார். திரிஷா தெரு நாய்களை பிடித்து வளர்த்து அவற்றை தத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட பின்னணி பாடகி சின்மயி, “இந்த பிரச்சினையில் போலீசார் வேகமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள்” என்று கூறியுள்ளார். சினிமா பின்னணி பாடகர் கிரிஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், “நாயை கீழே தூக்கி வீசியவர்கள் எப்படியும் வெளியே வந்து விடுவார்கள். இதற்கு ஒரே வழிதான் உள்ளது. அவர்களையும் இதேபோல தூக்கி எறிய வேண்டும்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.