இந்தி பட உலகின் முன்னணி கதாநாயகன் ஷாருக்கான். இவர் படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் அணி உரிமையாளராகவும் இருக்கிறார். திட்டமிட்டு பணியாற்றுவது, நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது, லாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்வது போன்றவற்றில் சாமர்த்திய சாலி என்று இந்தி திரையுலகினர் பாராட்டுகின்றனர். அப்படிப்பட்ட ஷாருக்கான் ஒரு தயாரிப்பாளரிடம் ஏமாந்து ரூ.8 கோடியை பறிகொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து ஷாருக்கான் அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமா தயாரிப்பாளர் ஒருவர் என்னை அணுகி ஒரு கதை சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்து போனது. அந்த படம் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தது. சில ஆபத்தான சீன்களும் அதில் இருந்தன. ஆனாலும் கதையில் நான் ஈர்க்கப்பட்டதால் அதன் தயாரிப்பு பணியில் பங்குபெற முடிவு செய்தேன்.
அந்த தயாரிப்பாளரிடம் முன்பணமாக ரூ.8 கோடி கொடுத்து படவேலைகளை தொடங்கும்படி அறிவுறுத்தினேன். முதலாவதாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளை தொடங்குவதாக அவர் என்னிடம் உறுதி அளித்தார். ஒருநாள் அவரது அலுவலகத்துக்கு பட வேலைகள் எப்படி நடக்கிறது என்பதை நேரில் பார்ப்பதற்காக சென்றேன். ஆனால் அங்கு ஒருவர் கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியானேன்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது அந்த தயாரிப்பாளருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் அலுவலகத்தை மூடிவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தனர். பிறகு அவரை கண்டுபிடித்து நான் கொடுத்த ரூ.8 கோடியை திருப்பி கேட்டேன். அதற்கு கால அவகாசம் கேட்டார். பின்னர் திடீரென்று பணத்தை தராமல் மாயமாகி விட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரை எனக்கு தெரியவில்லை.” இவ்வாறு ஷாருக்கான் கூறினார்.