கேரளாவில் கடந்த ஆண்டு வெறிநாய் கடித்து ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கொல்ல வேண்டும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் சாலைகளில் நடந்து செல்பவர்களை கடித்து குதறி வருகிறது. இதையடுத்து பாலக்காடு மாவட்டத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தனியாக வளர்க்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர்.
தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இருந்தாலும் நாய்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. இந்தநிலையில் தற்போது பாலக்காடு மாவட்டத்தில் வீடுகளில் நாய்களை வளர்ப்போர் அதற்கு அந்தந்த பஞ்சாயத்துகளில் முறையான அனுமதி வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தங்களது வீடுகளில் நாய் வளர்ப்போர் அந்தந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும்.
நாய்கள் கழுத்தில் அடையாள அட்டையை கண்டிப்பாக கட்டி தொங்க விட வேண்டும். அந்த அடையாள அட்டையில் நாயின் வயது, எந்த இனத்தை சேர்ந்தது, உரிமையாளர் பெயர், தடுப்பூசி போடப்பட்ட தேதி, உரிமையாளர் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முறையாக எழுதப்பட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் நாய்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்.