‘மாயா’ படத்திற்கு பிறகு நயன்தாரா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வரிசையில் தற்போது அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் ‘டோரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடி கிடையாது. அதேபோல், இப்படத்தில் காதல் காட்சிகளும் கிடையாதாம். முழுக்க முழுக்க நயன்தாராவை மட்டுமே மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி வருகின்றனர். சென்னை மற்றும் அதனை சுற்றியிருக்கும் இடங்களில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்க உள்ளனர்.
இப்படத்தில் ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹரிஷ் உத்தமன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சுலிலே குமார் வில்லனாக நடிக்கிறார். கொலை மற்றும் அதுகுறித்த விசாரணைகளை சுற்றி உருவாகும் இக்கதையில் கார் ஒன்றும் முக்கிய பங்கு வகிக்கிறதாம். இப்படத்தை இயக்குனர் சற்குணம் தயாரிக்கிறார். விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்.