தமிழில், ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்சி. வந்தான் வென்றான், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா-2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. தெலுங்கிலும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். இதனால் இந்தியில் வாய்ப்பு தேடி வந்திருக்கிறார். இங்கு 2 இந்தி படங்களில் அவர் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டு இருக்கிறார்.
டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-
“நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் பட உலகம் பற்றி அதிகம் தெரிந்து இருக்கவில்லை. கதைகள் தேர்விலும் அக்கறை இல்லாமல் இருந்தேன். நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளில் நடித்தேன். நிறைய படங்களில் என்னை கவர்ச்சியாகவே நடிக்க வைத்தார்கள். தெலுங்கு படங்களில் அப்படித்தான் நான் வந்தேன். இதனால் என் மீதான மதிப்பு குறைந்தது. கவர்ச்சி வேடங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வந்தன.
எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையாமல் போனது. ஆனால் இப்போது இந்தியில் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வந்துள்ளன. இதன் மூலம் எனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன்.
இந்தியில் சிறந்த நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் போட்டியை சமாளித்து நிலைத்து இருப்பது கஷ்டம். ஆனாலும் நான் எனக்குரிய இடத்தை பிடிக்க கஷ்டப்பட்டு போராடுகிறேன். இந்தியில் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கிய பிறகு மற்ற மொழி படங்களிலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன்.” இவ்வாறு டாப்சி கூறினார்.