ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே ஜோடியாக நடித்து ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பில் உலகம் முழுவதும் வருகிற 22-ந் திகதி ரிலீசாக இருக்கிறது, ‘கபாலி’ படம். ரஜினிகாந்தின் 41-வருட சினிமா வாழ்க்கையில் இது அவரது 159-வது படமாக வருகிறது. இதில் அவர் தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கு முன்பு ‘பாட்ஷா’ படத்தில் தாதாவாக நடித்து இருந்தார். முந்தைய படங்களான சிவாஜி, எந்திரன், லிங்கா படங்களுக்கு இல்லாத பரபரப்பும் வியாபாரமும் ‘கபாலி’ படத்துக்கு இருப்பது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த படம் திரையிடப்படுகிறது. பாரீசில் 2 ஆயிரத்து 800 இருக்கைகள் கொண்ட உலக புகழ் பெற்ற ரெக்ஸ் திரையரங்கில் வருகிற 21-ந் திகதி சிறப்பு காட்சியாக திரையிடப்படும் முதல் இந்திய திரைப்படம் ‘கபாலி.’ விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்ட முதல் இந்திய படம் என்ற பெருமையையும் கபாலி பெற்று இருக்கிறது.
‘கபாலி’யில் ரஜினிகாந்த் மூன்று வித தோற்றங்களில் வருகிறார். மலேசிய ரப்பர் தோட்டங்களில் உள்ளூர் முதலாளிகளால் அடிமைப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அல்லல்படும் அப்பாவி தமிழர்களை தாதாவான ரஜினி எப்படி மீட்கிறார் என்பதே கதை.
இந்த படம் 22-ந் திகதி தமிழகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்படுவதால் ஏற்கனவே இந்த மாதம் இறுதியில் திரையிட திட்டமிட்டு இருந்த தனுசின் ‘தொடரி’, திரிஷா நடித்துள்ள ‘நாயகி’ படங்கள் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
எஸ்.வி.சேகரின் ‘மணல் கயிறு இரண்டாம் பாகம்,’ கவுண்டமனி கதாநாயகனாக நடித்துள்ள ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது,’ ராஜ்கமல் நடித்துள்ள ‘சண்டிக்குதிரை,’ ‘வாகா’ உள்பட மேலும் 8 படங்களின் ரிலீஸ் தேதிகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சும்மாவே ஆடுவோம், ஒன்பதிலிருந்து பத்துவரை, கிழக்கு சந்து, பிரபாஸ் பாகுபலி உள்பட சில படங்கள் கபாலி வெளியாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக நாளை (15-ந் திகதி) திரைக்கு வருகின்றன.
கபாலி படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து அரசின் கேளிக்கை வரிவிலக்குக்கு இந்த படம் தகுதி பெற்றுள்ளது.