கமல்ஹாசன் தற்போது டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் அமெரிக்காவில் தொடங்கியது. இப்படத்தில் கமலுடன், அவரது மகள் ஸ்ருதிஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அமெரிக்காவில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துவிட்டு, சென்னை திரும்பியிருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில், இன்று காலை அவர் திடீரென கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தின் மாடிப்படியில் இருந்து இறங்கும்போது தவறி கீழே விழுந்ததாகவும், அதில் கமலுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும், அதன்காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் விசாரிக்கையில், கமல்ஹாசன் வழக்கமாக மேற்கொள்ளும் சிகிச்சைக்காகத்தான் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.