அவுஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் பல்லேகலயில் வருகிற 26-ந் திகதி தொடங்குகிறது.
அதற்கு முன் வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை மண்ணில் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும் வகையில் அவர்கள் முத்தையா முரளீதரனிடம் ஆலோசனை பெற்றுள்ளனர். இவர் முதல் டெஸ்ட் தொடங்கும் வரை அணிக்கு ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முரளீதரன் ஆலோசனை வழங்கி வருவதை அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘இலங்கை மண்ணில் முரளீதரன் ஏராளமான அனுபவங்களை பெற்றுள்ளார். அவர் 800 என்ற திகைக்க வைக்கும் விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். அவரைப்போல் ஒருவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. அவருடைய ஆழ்ந்த அறிவு எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும். எங்களுடைய அணி வீரர்களும் சிறந்த வகையில் உலா வந்தார். அவருடைய நேரத்தை எங்களுடன் மகிழ்ச்சியாக செலவழித்தார்.
இதற்கு முன் 2014-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அவுஸ்திரேலியா விளையாடும்போது முரளீதரனை குறைந்த கால ஆலோசகராக ஆஸி. அணி நியமித்தது குறிப்பிடத்தக்கது.