உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதி எம்.பி.யாக இருக்கிறார் 65 வயது நிறைந்த நடிகை ஹேமா மாலினி. இவர் கடந்த மாதம் மும்பையில் ஏக் தி ராணி என்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதன்பின் தனது படப்பிடிப்பு குறித்த புகைப்படங்களை டுவிட்டரில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதேவேளையில், மதுரா பகுதியில் அரசு நிலத்தினை ஒரு பிரிவினர் ஆக்கிரமித்து இருந்தனர். அவர்களை வெளியேற்ற சென்ற போலீசாருக்கும் மற்றும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஒரு போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் ஒரு போலீசார் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் மொத்தம் 29 பேர் பலியாகினர். அந்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் பெரிய அளவில் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பின் 320 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் டுவிட்டரில் புகைப்படங்களை வெளியிட்ட ஹேமா மாலினிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பற்றிய புகைப்படங்களை டுவிட்டரில் இருந்து அழித்ததுடன் மோதலில் பலியானவர்களுக்கு தனது இரங்கலையும் வெளியிட்டார். நான் மதுராவுக்கு எப்படியாயினும் செல்வேன். ஆனால், நான் அங்கு இருப்பதை விட சட்டம் மற்றும் ஒழுங்கானது அங்கு இருப்பது முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், படத்தில் நடிப்பது மற்றும் நடனம் பற்றிய தகவல்களையே டுவிட்டரில் வெளியிடுவேன் என அவர் கூறியுள்ளார்.
இது பற்றி கூறிய அவர், எனது அரசியல் நடவடிக்கை எந்த வகையிலாவது ஊடகத்தில் வெளியாகி விடுகிறது. அதனால் தனது டுவிட்டர் பதிவானது நடிப்பு பணி பற்றிய தகவல்களையே கொண்டிருக்கும். அதிக சிந்தனைக்கு பின்னரே இந்த முடிவை எடுத்தேன்.
நான் ஒரு நடிகை. எப்பொழுதும் அப்படியே இருப்பேன். எனது ரசிகர்களுக்காக டுவிட்டர் பதிவினை தொடங்கினேன். அதனால் அரசியல் தவிர்த்த எனது நடவடிக்கைகள் பற்றிய செய்திகளையே தொடர்ந்து நான் அவர்களுக்கு அளிப்பேன். அரசியல் வாழ்க்கை எப்படியும் ஊடகம் வழியே வெளிவந்து விடுகிறது என டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
எனது தொகுதிக்காக ஒரு எம்.பி.யாக எப்பொழுதும் உண்மையுடன் பணியாற்றி வருகிறேன். மற்றவர்களின் தூண்டுதல் இன்றி தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் டுவிட்டரில் ஹேமா மாலினி தெரிவித்துள்ளார்.