நாயகன் ரவிச்சேத்தன், நாயகி காஜல் ராவத்தும் காதலர்கள். இருவரும் ஒரு பங்களாவுக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருக்கிறார்கள். அப்போது, எதிர்பாராதவிதமாக காஜல் ராவத் இறந்துபோகிறாள். அவளை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் கொண்டு சென்று ஹரிஷ் ராஜ் புதைத்துவிடுகிறான்.
அதன்பின்னர் சில ஆண்டுகள் கழித்து, அந்த பங்களாவுக்கு மாணவர்கள் நான்குபேர் வந்து தங்குகிறார்கள். அவர்களுக்கு அந்த வீட்டில் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதுபோல் தென்படுகிறது. பின்னர், சினிமா படம் எடுக்க வரும் நான்கு பேர் அந்த வீட்டில் தங்க, அவர்களுக்கும் அந்த அமானுஷ்ய சக்தி இருப்பதுபோல் தெரிகிறது.
ஒருவழியாக அந்த பங்களாவுக்குள் பேய் இருப்பதை இவர்கள் உறுதி செய்கின்றனர். அந்த சூழ்நிலையில் பங்களாவின் காவலாளி மர்மமான முறையில் இறந்துபோக, இவர்களுக்கு பயம் தொற்றிக் கொள்கிறது. உண்மையில் பேய்தான் இவரை கொன்றதா? அல்லது வேறு யாராவது கொன்றார்களா? என்பதே மீதிக்கதை.
திகில் படத்தை கவர்ச்சி கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் சுரானா. ஆனால், காட்சிகள் கோர்வையாக இல்லாததால் படத்தை ரசிக்க முடியவில்லை. அதேபோல், திகில் காட்சிகளும் பெரிய அளவில் திகிலை ஏற்படுத்தவில்லை.
படத்தில் நாயகியான காஜல் ராவத், கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை கிளுகிளுப்பாக படமாக்கியிருக்கிறார்கள். நாயகன் ரவிச்சேத்தன் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் குறைவான கதாபாத்திரங்களையே பயன்படுத்தியிருந்தாலும், எந்த கதாபாத்திரமும் மனதில் பதியவில்லை.
டேனியலின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பேய் படத்திற்குண்டான பின்னணி இசையை கொடுக்காதது வருத்தமே. பாபு ஒளிப்பதிவு கச்சிதம். குறிப்பாக இரவு நேர காட்சிகளுக்கு சரியான ஒளியமைப்பு வைத்து அழகாக படமாக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘நான் மாயா’ மயக்கவில்லை.