ஒரு கிராமத்தில் ஜமீனாக இருக்கும் ஆனந்தன் அந்த ஊரில் உள்ள கூத்துக்கலைஞர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வரும் ஜமீனை, கூத்து கலைஞர்கள் அனைவரும் அவரை கடவுள் போல பார்த்து வருகின்றனர்.
இருந்தாலும், ஜமீன் ஆனந்துக்கும் யுவராணிக்கும் திருமணமாகி பல ஆண்டு ஆகியும் அவருக்கு குழந்தையே இல்லை என்ற கவலையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், இவரது ஜோசியரான பாண்டு, ஜமீனுக்கு அவர் மனைவி மூலமாக முதல் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், இரண்டாவதாகவே குழந்தை பிறக்கும் என்றும் கூறுகிறார்.
இதனால் குழப்பத்தில் இருக்கும் ஜமீனின் சூழ்நிலையை புரிந்து, இந்த விஷயம் அறிந்து கூத்துக் கலைஞன் பாலாசிங்கின் மகளான அம்மு, ஜமீன் மூலமாக முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறாள். பாதி மனநிலையுடன் அம்முடன் ஒன்று சேருகிறார் ஜமீன். நாட்கள் கடந்ததும் அம்மு கர்ப்பமடைகிறாள். அதேநேரத்தில் யுவராணியும் கர்ப்பமடைகிறாள்.
இருவருக்கும் ஒருநேரத்தில் ஒரே மருத்துவமனையில் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் அம்மு இறந்துபோகிறாள். ஜமீன் தான் செய்தது பெரிய குற்றமாக நினைத்து, அந்த குழந்தைக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி யுவராணிக்கு பிறந்த குழந்தையையும், அந்த குழந்தையையும் மாற்றி வைத்து விடுகிறார்.
இரண்டு குழந்தைகளுக்கும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். ஜமீன் வீட்டில் வளரும் குழந்தையான அர்ஜுன் சினிமாவில் பெரிய ஹீரோவாகிறார். கூத்துக் கலைஞர்களுடன் வளரும் அருண், மெக்கானிக் கடை வைத்துக் கொண்டு, அர்ஜுனின் தீவிர ரசிகராகவும் இருக்கிறார்.
அர்ஜுனின் தீவிர ரசிகராக இருக்கும் அருணுக்கு ஒரு சூழ்நிலையில், அர்ஜுனின் மாமாவால் அவமானம் நேரிடுகிறது. அர்ஜுனின் மாமா கூத்துக் கலைஞர்களுக்கு ஜமீன் வழங்கிய நிலத்தையெல்லாம் அபகரிக்க நினைக்கிறார். இதனால், சூழ்ச்சி செய்து அந்த நிலத்தை அபகரிக்க திட்டம் போடுகிறார்.
அதன்படி, அர்ஜுனை ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அவமானப்படுத்துவதாக கூறி, அவர்களுக்கு ஒரு சவால் விடுகிறார். அதாவது 30 நாட்களுக்குள் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு படத்தை எடுத்துக் கொடுத்தால் ஜமீன் நிலத்தை அவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்துவிடுவதாகவும், அப்படி அவர்களால் முடியாவிட்டால் ஜமீன் கொடுத்த நிலத்தையெல்லாம் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஊரைவிட்டே வெளியேறவேண்டும் என்றும் கூறுகிறார்.
இறுதியில், ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அந்த சவாலை எதிர்கொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை மீட்டார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
நாயகன் அருண், மெக்கானிக் கடை வைத்திருப்பவராகவும், ஒரு நடிகனின் ரசிகராகவும் அழகாக நடித்திருக்கிறார். டான்ஸ் மற்றும் காதல் காட்சிகள், சண்டை காட்சிகளில் எல்லாம் ஓரளவுக்கு திருப்திப்படுத்தியிருக்கிறார். நடிகராக வரும் அர்ஜுனுக்கு சில காட்சிகளே இருந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
ஜமீனாக வரும் ஆனந்தன், முரட்டுத் தோற்றத்தில் இருந்தாலும் மிகவும் மென்மையான கதாபாத்திரம். ஒரு சில இடங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தாலும், முக்கியமான காட்சிகளில் எல்லாம் சரியான வசன உச்சரிப்பு இல்லாதது கொஞ்சம் சோர்வடைய வைக்கிறது. நாயகி லீமா பாபு படம் முழுக்க வந்தாலும், அவரது கதாபாத்திரத்தை சரியாக பயன்படுத்தவில்லை. பாடல் காட்சிகளுக்கு மட்டுமே இவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
கூத்து கலைஞராக வரும் பாலாசிங் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். பாலாசிங் மகளாக வரும் அம்மு, ஒருசில காட்சிகளே வந்தாலும், நிறைவாக செய்திருக்கிறார். சம்பத்ராம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இப்படத்தின் இயக்குனர் ‘காதல்’ சுகுமார் இப்படத்தில் இயக்குனராகவே நடித்திருக்கிறார்.
இயக்குனர் ‘காதல்’ சுகுமார், கூத்துக் கலைஞர்களின் வலியையும், வேதனையையும் இந்த படத்தில் காட்ட நினைத்திருக்கிறார். ஆனால், சொல்ல வந்த விஷயத்தை விட்டு விலகி, கதையை வேறு கோணத்தில் கொண்டு சென்றுவிட்டார். அதேபோல், கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையையும் இந்த படத்தில் பெரிதாக காட்டவில்லை. நடிகராக நம்மையெல்லாம் கவர்ந்த சுகுமார், இயக்குனராக மாறிய இரண்டு படங்களும் நம்மை கவரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் படத்தில் பெரிதாக எடுபடவில்லை.
மொத்தத்தில் ‘சும்மாவே ஆடுவோம்’ ஆட்டம் சரியில்லை.