சென்னையில் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் நாயகி ஹசிகா. இவள் வேலைபார்க்கும் கம்பெனியின் மேனேஜர், அழகான பெண்களை பார்த்தால் அவர்களை அடைந்துவிட துடிப்பவர். இதனால், நாயகி மீதும் இவருக்கு ஒரு கண்.
இந்நிலையில், ஹசிகாவை காதலிப்பதாக அங்கு பணிபுரியும் திலீபன் என்பவர் அவருக்கு மெசேஜ் அனுப்புகிறார். இதையறியும் மேனேஜர், ஹசிகாவுக்கு மெசேஜ் அனுப்பியவரை கூலிப்படையை வைத்து கொலை செய்கிறார். பின்னர், ஒருநாள் நாயகி பணிபுரியும் கம்பெனியிலேயே வேலைக்கு சேருகிறார் நாயகன் சுபாஷ்.
நாயகியுடன் நெருங்கிப் பழக ஆரம்பிக்கும் நாயகன், ஒருகட்டத்தில் அவளை காதலிக்கவும் தொடங்குகிறார். நாயகியும் இவரை காதலிக்க தொடங்குகிறாள். நாயகன் அவளிடம் காதலை சொல்வதற்கு முன்பாகவே, அனைவர் முன்னிலையிலும் தனது காதலை நாயகனிடம் வெளிப்படுத்துகிறாள் நாயகி.
இதனால் கோபமடையும் மேனேஜர், நாயகனையும் கொலை செய்ய திட்டம் போடுகிறார். ஆனால், அதிலிருந்து நாயகன் தப்பித்து விடுகிறார். பின்னர், நாயகியிடம் சென்று அவளை அடைய விரும்புவதாகவும், இதற்கு சம்மதிக்காவிட்டால் நாயகனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இதனால், பயந்துபோன நாயகி, நாயகனுக்கு போன்போட்டு தன்னை அவனுடைய சொந்த ஊருக்கு அழைத்து சென்றுவிடுமாறு கூறுகிறாள்.
நாயகனும், நாயகியை அழைத்துக்கொண்டு அவனது சொந்த ஊருக்கு பஸ்ஸில் பயணம் செய்கிறார். செல்லும்வழியில் பஸ்ஸில் பயணம் செய்த திருடன் ஒருவன் நாயகனின் டிக்கெட்டையும், அவனது சூட்கேசையும் திருடிக் கொண்டு சென்றுவிடுகிறான். திருடன் தூக்கிச் சென்ற சூட்கேசில், ஒரு பிணம் இருப்பதை கண்டதும் அவன் அதிர்ச்சியடைகிறான். பின்னர், போலீஸ் விசாரிக்கையில், அது நாயகனுடைய சூட்கேஸ்தான் என்று போலீசார் கண்டுபிடிக்கின்றனர்.
இதனால் நாயகனை போலீசார் பின்தொடர்கின்றனர். இறுதியில், அந்த பிணத்துக்கும் நாயகனுக்கும் தொடர்பு உள்ளதா? அந்த சூட்கேசில் இருந்த பிணம் யாருடையது? என்ற மர்மமான முடிச்சுகளுக்கு பிற்பாதியில் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகன் சுபாஷுக்கு ஹீரோயிசம் இல்லாத கதாபாத்திரம். இருப்பினும், தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி ஹசிகாவுக்கு கதையை தாங்கிச் செல்கிற வலுவான கதாபாத்திரம். ஆனால், அழுத்தமான காட்சிகளை நாயகிக்கு வழங்காததால் அந்த கதாபாத்திரத்தின் தன்மையே வலுவிழந்து போய்விட்டது.
திலீபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் முக்கியமான கதாபாத்திரமாக வலம்வந்திருக்கிறார். விசாரணை அதிகாரியாக வரும் சரவண சுப்பையா, போலீஸ் அதிகாரிக்குண்டான மிடுக்குடன் கச்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார்.
மாறிவரும் நாகரீக உலகில் பெண்கள் மாடர்னாக இருக்க ஆசைப்பட்டு தவறான பாதைக்கு செல்கின்றனர். இதனால், கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது என்பதை இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். ஆனால், சரியான காட்சிப்படுத்துதல் இல்லாததால் சொல்ல வந்த கருத்து ரசிகர்களிடம் சரியாக சென்று சேரவில்லை. திரைக்கதை மிகவும் சொதப்பல்.
வேலன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது. ஒளிப்பதிவும் சிறப்பாகவே இருக்கிறது.
மொத்தத்தில் ‘கிழக்கு சந்து கதவு எண் 108’ பொலிவு இல்லை.