சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள கபாலி படம் திரையிடப்படும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆகவே அப்படத்துக்குத் தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்கிறவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய மனுவில் அவர் கூறியதாவது,
பல்வேறு திரையரங்குகளில் கபாலி திரைப்படம் ஜூலை 22ம் திகதி திரையிடப்படவுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
டிக்கெட்டுகளை ஏழை, எளிய மற்றும் நடுத்தர ரசிகர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அப்படத்துக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது படத்துக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதி, மனுவையும் தள்ளுபடி செய்தார்.