கணவரை விவாகரத்து செய்த இந்தி நடிகை கரிஷ்மா கபூர் 2-வது திருமணம் செய்து கொள்கிறார்.
இந்தி படஉலகின் முன்னணி கதாநாயகி கரிஷ்மா கபூருக்கு 42 வயது ஆகிறது. இவரது தங்கைதான் கரீனா கபூர் என்பது குறிப்பிடத்தக்கது. கரிஷ்மா கபூருக்கும், தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் கடந்த 2003-ம் ஆண்டில் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் உள்ளனர். சந்தோஷமாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்பு புயல் வீசியது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள்.
கோர்ட்டில் திடீரென்று விவாகரத்து வழக்கும் தொடர்ந்தனர். சமீபத்தில் இவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது. இந்த நிலையில் கரிஷ்மா கபூருக்கும், தொழில் அதிபர் சந்தீப் தோஷ்னிவாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர்.
இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். 2 வாரங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு கரிஷ்மா கபூர் தனது காதலரை அழைத்துக்கொண்டு சென்றார்.
அதே ஓட்டலுக்கு முன்னாள் கணவர் சஞ்சய் கபூரும் வந்து இருந்தார். கரிஷ்மாவை இன்னொருவருடன் பார்த்ததும் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இருவரையும் அவர் அடிக்க பாய்ந்ததாகவும், நண்பர்கள் குறுக்கிட்டு ‘விவாகரத்து செய்த பிறகு கரிஷ்மா யாருடன் வந்தால் என்ன? அவரை கண்டிக்க உரிமை கிடையாது’ என்று சொல்லி சஞ்சய் கபூரை சமரசப்படுத்தியதாகவும் தகவல்கள் பரவின. நான் கரிஷ்மாவிடம் தகராறில் ஈடுபடவில்லை என்று சஞ்சய்யும் மறுப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில், கரிஷ்மா கபூர் தனது காதலர் சந்தீப் தோஷ்னிவாலை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் விரைவில் நடக்க இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.