மிகப்பெரிய நடிகையாக வேண்டும் ஆசையில் கிராமத்தில் இருந்து சென்னை கோடம்பாக்கம் ஏரியாவில் நுழைகிறாள் நாயகி கோகிலா. பேப்பரில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு தவறான தயாரிப்பு நிறுவனத்தில் நுழைந்து வாய்ப்பு கேட்கிறாள். அவர்கள் இவளிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்று, ஹீரோ மற்றும் அவரது நண்பர்களிடம் சென்று உதவி கேட்கிறாள்.
போதையில் இருக்கும் அவர்கள் கோகிலாவுக்கு உதவுவதாக கூறி, அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள். அப்போது அங்கு வரும் போலீஸ்காரர், கோகிலாவை காப்பாற்றி தன்னுடன் அழைத்து செல்கிறார். ஆனால், அந்த போலீஸ்காரர் அவளை கற்பழித்து, ஆந்திராவில் விபச்சாரத்துக்குள் தள்ளிவிடுகிறார்.
அங்கிருந்து தப்பித்து சென்னை திரும்பும் கோகிலாவை பிடிக்க அவரது வாழ்வை சீரழித்த போலீஸ்காரரும், விபச்சார கும்பலின் தலைவனும் தீவிரமாக இருக்கின்றனர். இவர்களின் கண்ணில் படாமல் தப்பிக்க கோகிலா தலைமறைவாகிறாள். இந்நிலையில், ஒருநாள் போதையில் இருக்கும் ஹீரோ மற்றும் அவருடைய நண்பர்களின் கண்ணில் படுகிறாள் கோகிலா. ஏற்கெனவே, கோகிலாவை தவறவிட்ட நண்பர்கள் இந்தமுறை அவளை கடத்தி சென்று அவளை கற்பழித்துவிடுகிறார்கள்.
விபச்சார கும்பலிடம் சிக்கியதால் எய்ட்ஸ் நோயாளியான கோகிலா, இவர்களின் முரட்டு தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் மயக்கமடைகிறாள். அவளை யாருக்கும் தெரியாமல் கொலை செய்துவிட முடிவெடுக்கிறார்கள். ஆனால், போலீசிடம் மாட்டிக் கொள்கிறார்கள். கோகிலாவும் கோமா நிலைக்கு சென்றுவிடுகிறாள்.
இதன்பிறகு நண்பர்களின் கதி என்னவாயிற்று? கோமா நிலைக்கு சென்ற கோகிலா என்னவானாள்? என்பதே மீதிக்கதை.
படத்தின் ஹீரோவான ராஜேஷ் ஹீரோவுக்கான தோற்றத்துடன் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் மிளிர்கிறார். அவருடைய நண்பர்களாக வருபவர்களும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அழகாக செய்திருக்கிறார்கள். போலீஸ் உயரதிகாரியாக வரும் ‘பசங்க’ சிவகுமார், மிரட்டும் தொனியில் இருந்தாலும், அவரது நடிப்பு ஏனோ நம்மை ஈர்க்கவில்லை.
கோகிலாவாக வரும் ஜகின், படம் முழுக்க ஒருவித பயத்துடனேயே நடித்துள்ளார். நடிப்பையும் தன்னுடைய முகத்தில் வரவழைக்க ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். அதேபோல், ஹீரோவின் நண்பனின் மனைவியாக நடித்திருப்பவர் ஒவ்வொரு பேச்சுக்கும் தனது கையாலேயே சைகை காட்டி நடித்திருப்பது, அனுதாபத்திற்கு பதில் சிரிப்பைத்தான் வரவழைத்திருக்கிறது.
இந்த படம் மூலம் சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்களை இயக்குனர் முத்துப்பாண்டி சொல்ல வந்திருக்கிறார். சினிமா ஆசையில் கோடம்பாக்கத்தில் நுழையும் பெண்கள் தவறான நபர்களிடம் சிக்கிக் கொண்டால் அவர்களின் நிலை என்ன? என்பதையும் போதைக்கு அடிமையாகும் ஆண்கள் தவறான பாதையில் செல்வதால் அவர்களின் குடும்பம் எந்த நிலைமைக்கு செல்கிறது? என்பதையும் இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார்.
ஆனால், சரியான கதாபாத்திரங்கள் தேர்வு இல்லாததால் சொல்ல வந்த கருத்தை அனைவரும் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. கதாபாத்திரங்களையும், காட்சியமைப்புகளையும் சிறப்பாக தேர்வு செய்திருந்தால் சமூகத்திற்கு இந்த படம் நல்லதொரு பாடமாக அமைந்திருக்கும்.
கண்ணன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பென் ஒளிப்பதிவு படத்தின் கதைக்கேற்றபடி இருக்கிறது.
மொத்தத்தில் ‘கோடம்பாக்கத்தில் கோகிலா’ அழகாய் இல்லை.