காலேஜ் படிக்கும் காலத்தில் இருந்தே பிரபாஸின் அப்பா பிரபுவும், காஜலின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருப்பதால் பிரபாஸும், காஜலும் சிறுவயதிலிருந்தே நெருங்கி பழகுகிறார்கள். ஒருகட்டத்தில் காஜலின் அப்பா, அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்றுவிடுகிறார். பிரபாஸ் இந்தியாவிலேயே வளர்ந்து பெரியவனாகிறார்.
காலேஜில் படித்து வரும் பிரபாஸை பிரபல ரவுடியான முகேஷ் ரிஷியின் மகள் ஒருதலையாக காதலிக்கிறாள். பிரபாஸிடம் சென்று தனது காதலை சொல்லும்போது பிரபாஸ் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இதனால், அவள் தற்கொலைக்கு முயல்கிறாள். தனது மகளின் காதலை புரிந்துகொண்ட முகேஷ் ரிஷி, பிரபாஸை அழைத்து தனது மகளின் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு துப்பாக்கி முனையில் அவனை மிரட்டுகிறார்.
உடனே, பிரபாஸ் தனக்கு ஏற்கெனவே ஒரு காதலி இருப்பதாகவும், அவள் தற்போது கோமா நிலையில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு அனுதாப கதையை கூறி முகேஷ் ரிஷியிடமிருந்து தப்பிக்கிறார். இந்நிலையில், வெளிநாட்டுக்கு சென்ற காஜல் அகர்வால் திரும்பவும் இந்தியாவுக்கு வருகிறார். அவரை சந்திப்பதற்காக எதிர்பார்த்து காத்திருக்கும் பிரபாஸ், அவளை சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே முட்டி மோதிக் கொள்கிறார். பின்னர், ஒருகட்டத்தில் இருவரும் காதலர்களாகிறார்கள்.
இதற்கிடையில், பிரபாஸ் தனக்கு ஒரு காதலி இருப்பதாக கூறியதெல்லாம் பொய் என்பது முகேஷ் ரிஷிக்கு தெரிய வருகிறது. பிரபாஸ் தற்போது காஜலை காதலித்து வருவதும் ரிஷிக்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடைந்த முகேஷ் ரிஷி, பிரபாஸின் காதலியை கொன்று தனது மகளுடன் பிரபாஸை சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார்.
இறுதியில், முகேஷ் ரிஷியின் திட்டம் பலித்ததா? பிரபாஸும், காஜலும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
தெலுங்கில் ‘டார்லிங்’ என்ற பெயரில் வெளிவந்த படம் தமிழில் ‘பிரபாஸ் பாகுபலி’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. ‘பாகுபலி’ படத்தில் மாவீரனாக தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த பிரபாஸ், இப்படத்தில் மிகவும் சாக்லேட் பாயாக நடித்திருப்பது புது அனுபவத்தை கொடுத்திருக்கிறது. உயரமான தோற்றம், ஒல்லியான தேகம் என ஓரளவு கவர்ந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு பிரபாஸ் ஒரு மாவீரனாகவே கவர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு சண்டைக் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
காஜல் அகர்வால் வழக்கம்போல் ரொமான்ஸ், பாடல் காட்சிகளில் எல்லாம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரபு பாசமுள்ள அப்பாவாகவும் கலகலப்பான மனிதராகவும் மனதில் பதிகிறார். பிரபுவின் நண்பர்களாக வருபவர்களும் நடிப்பில் மிளிர்கிறார்கள். முகேஷ் ரிஷி ஹைடெக் வில்லனாக மிரட்டுகிறார்.
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு அழகான படத்தை கொடுத்திருக்கிறார் கருணாகரன். காதல் கதையில் அளவான காமெடி, அளவான ஆக்ஷன் கலந்து படத்தை எடுத்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களையும் இப்படம் கவரும் என்று எதிர்பார்க்கலாம். அந்தளவுக்கு இரண்டு தரப்பு ரசிகர்களும் கவர்கிற வகையில் படத்தை கொடுத்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையை கதைக்கேற்றவாறு அமைத்திருக்கிறார். ஆண்ட்ரூ பாபுவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் கலர்புல்லாகவும் அமைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘பிரபாஸ் பாகுபலி’ ரசிக்கலாம்.