ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வருகிற ஜுலை 22-ந் திகதி வெளியாகிறது. எந்த படத்துக்கு இல்லாத அளவுக்கு பிரம்மாண்ட அளவில் இந்த படம் வியாபாரம் ஆகியுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.
கிட்டத்தட்ட ரூ.500 கோடியை தாண்டி வசூலை எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், ´கபாலி´ படம் இணையதளங்களில் வெளியாகிவிட்டதாக பரபரப்பு தகவல் ஒன்று தற்போது பரவி வருகிறது.
போதை பொருள் விற்பனை செய்வது, கொலை செய்வதற்கு ஆட்கள் தயார் செய்துகொடுப்பது, குழந்தைகளின் பாலியல் தொடர்பான வீடியோக்கள் ஆகியவற்றை சட்டத்திற்கு புறம்பாக வெளியிட்டு வரும் ‘டார்க் வெப்’ என்ற இணையதளத்தில்தான் ´கபாலி´ படம் திருட்டுத்தனமாக வெளியானதாக கூறப்படுகிறது.
இந்த இணையதளத்திற்குள் சாதாரண மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது. சில சாப்ட்வேர்களை பயன்படுத்திதான் இந்த இணையதளத்திற்குள் நுழைய முடியும் என்று கூறப்படுகிறது. அப்படியிருக்கும், அந்த இணையதளத்திற்குள் யார் சென்று ‘கபாலி’ படத்தை பார்த்துவிட முடியும் என்பதுதான் அனைவரது கேள்வியாக இருந்தாலும், இதன்மூலம் திருட்டு விசிடி பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், விசாரிக்கையில் அந்த இணையதளத்தில் ‘கபாலி’ படம் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது. யாரோ சிலர் வேண்டுமென்றே இந்த புரளியை கிளப்பிவிட்டதாக கூறப்படுகிறது. தாணு சமீபத்தில்தான், ஐகோர்ட்டில் ‘கபாலி’ படத்தை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களை முடக்குவதற்கு உத்தரவு வாங்கியிருந்தார். அப்படியிருக்கையில், ‘கபாலி’ படம் திருட்டுத்தனமாக வெளியான செய்தி கோலிவுட் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், சினிமா ஆர்வலர்கள் இதுகுறித்து கூறும்போது, பெரிய நடிகர்களின் படங்கள் இதுபோல் திருட்டுத்தனமாக வெளியானால் அது அந்த படத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சிறு பட்ஜெட், புது ஹீரோக்களின் படங்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏற்படும். இருப்பினும், இதுபோல் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று என்று கூறுகின்றனர்.