மதுரை திருநகரை சேர்ந்தவர் மகாராஜன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் கபாலி. இந்த படத்தின் பாடல்கள் 2 வாரங்களுக்கு முன்பு வெளியாயின. அந்த பாடல்களை சமீபத்தில் நான் கேட்டேன்.
அவற்றில், பாடல் ஆசிரியர் கபிலன் எழுதிய “உலகம் ஒருவனுக்காக…” என்று தொடங்கும் பாடலின் இடையே வரும் சில வரிகள் சாதி ரீதியாகவும், குறிப்பிட்ட சிலரை புண்படுத்தும் வகையிலும் எழுதப்பட்டு உள்ளன. சில வரிகள் பொதுப்பிரிவினரையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் காயப் படுத்தும் வகையில் உள்ளன.
இதுபற்றி சமூக வலை தளங்களில் கருத்து மோதல்கள், தேவையற்ற விவாதங்கள் நடந்து வருவதுடன் வதந்திகளையும் பரப்புகிறார்கள். எனவே சர்ச்சைக்குரிய அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று திருநகர் போலீசில் புகார் மனு கொடுத்தேன்.
ஆனால் எனது மனு மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட்டு, கபாலி படத்தின் பாடலில் இடம்பெற்றுள்ள சர்ச்சை வரிகளை நீக்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.