தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:-
* ‘விலையில்லா சேலைகள் மற்றும் வேட்டிகள் வழங்கும் திட்டத்தின்’ கீழ், 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, 167.89 லட்சம் (ஒரு கோடியே 67 லட்சத்து 89 ஆயிரம்) சேலைகளும் 167.81 லட்சம் (ஒரு கோடியே 67 லட்சத்து 81 ஆயிரம்) வேட்டிகளும் வழங்கப்படும். விலையில்லா சேலைகள் மற்றும் வேட்டிகள் வழங்கும் திட்டத்திற்காக 487.45 கோடி ரூபாயும், தள்ளுபடி மானியத்திற்காக 78.45 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்காக 1,129.74 கோடி ரூபாயும், கைத்திறன் மற்றும் கதர்த் துறைக்காக 174.27 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ‘தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ், 12,524 ஊராட்சிகளில் அமைந்துள்ள 79,394 குடியிருப்புப் பகுதிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து முடிக்கப்பட்டது ஒரு மாபெரும் சாதனையாகும். மாநில நிதிக்குழு மானியங்களின் மூலம் கிடைக்கப்பெறும் நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை’ தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. 2016-2017-ம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்காக 7,155 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ‘ஒருங்கிணைந்த பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமானது, 2016-2017-ம் ஆண்டில் 100 கோடி ரூபாய் செலவில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
* 2015-2016-ம் ஆண்டில், ‘பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டத்தின்’ 9-வது கட்டப் பணிகள் 357.12 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தின் 10-வது கட்டப் பணிகளாக 758.44 கோடி ரூபாய் செலவில் 573 சாலைகளின் மேம்பாட்டுப் பணிகளும், 22 பாலப் பணிகளும் நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்படும்.
* ‘சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு 470 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ஊரக வளர்ச்சித் துறைக்கான ஒதுக்கீடு 21,186.58 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்து தலா 500 கோடி ரூபாய் அளவில், ‘ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கம்’ தொடர்ந்து செயல்படுத்தப்படும். நடைபெற்று வரும் பணிகள் உள்பட, ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கத்திற்காக 886 கோடி ரூபாயும், சென்னைப் பெருநகர மேம்பாட்டு இயக்கத்திற்காக 800 கோடி ரூபாயும் இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ‘திறன்மிகு நகரங்கள் திட்டத்தின்’ கீழ், சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகரங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. திறன்மிகு நகரங்கள் திட்டத்திற்காக 400 கோடி ரூபாயும், அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ‘தமிழ்நாடு நிலையான நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 2,212.89 கோடி ரூபாய் செலவில் 8 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 13 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கென, 2016-2017-ம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 399.39 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* முக்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பாதாள சாக்கடைத் திட்டங்களைச் செயல்படுத்த இந்த அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. 20 பாதாள சாக்கடைத் திட்டங்கள் 14.41 லட்சம் மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில், 1,017.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன், 205.23 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3 பாதாள சாக்கடைத் திட்டங்கள் ஒப்பந்தப்புள்ளி நிலையில் உள்ளன. இப்பணிகள் இவ்வாண்டில் தொடங்கப்படும்.
* நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக 11,820 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.