டெல்லியில் தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், நாடு முழுவதும் 29-ந் திகதி (வெள்ளிக்கிழமை) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு, வங்கிகளை தனியார் மயமாக்கல் போன்ற கொள்கைகள் எதிர்ப்பு, வாராக்கடனாக நிலுவையில் உள்ள ரூ.13 லட்சம் கோடியை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 மற்றும் 13-ந் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்து இருந்தது.
இதற்கு டெல்லி ஐகோர்ட்டு தற்காலிக தடை விதித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்தது. இதற்கிடையே, 29-ந் திகதி (வெள்ளிக்கிழமை) இந்தியா முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கிகள் சம்மேளனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இதனால், வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியது. இந்நிலையில் நேற்று டெல்லியில் மத்திய தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் வங்கி ஊழியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:-
நாங்கள் வங்கிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்ததன் காரணமாக மத்திய தொழிலாளர் நல ஆணையர் எங்களை டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். வங்கி நிர்வாகங்கள் எங்களை அழைக்கவில்லை. மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
அப்போது, இந்த அரசாங்கத்துறைகளின் தாராளமய கொள்கைகள், தனியார்மய கொள்கைகள் மேலும் வங்கிகள் வாராக்கடனை எப்படி வசூலிப்பது தொடர்பான விஷயங்களை எங்கள் தரப்பில் எடுத்துக்கூறினோம். கூட்டத்தில் கலந்து கொண்ட நிதி அமைச்சக அதிகாரிகள் எங்கள் கோரிக்கை எவற்றையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தனியார்மய கொள்கையை அரசாங்கம் மேலும் தொடரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் 29-ந் திகதி (வெள்ளிக்கிழமை) திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்து இருக்கிறோம். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பழைய தனியார் வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள் என நாடு முழுவதும் 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம் நாடு முழுவதும் 80 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்பட்டிருக்கும். இவ்வாறு சி.எச்.வெங்கடாச்சலம் கூறினார்.