அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் திகதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன.
இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட, ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு 2,383 வாக்குகள் பெற வேண்டும். நடந்து முடிந்த தேர்தல்களில் 2,842 வாக்குகள் பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.
முன்னதாக குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் வேட்பாளராக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு விட்டார். போட்டியிடும் இரு கட்சிகளும் தங்களது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி பதவியை கைபற்ற ஹிலாரி, டிரம்ப் இடையே போட்டி நடைபெறவுள்ளது.