சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோலை சேர்ந்த பெண் பொலிஸ் அதிகாரி மிகேலா கெல்னர். இவர் அங்குள்ள கடற்கரை பூங்காவில் தனது தோழிகளுடன் நீச்சல் உடையில் சூரிய குளியலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர் பத்திரிகை மற்றும் புத்தகங்கள் விற்றுக் கொண்டு வந்தான்.
அவன் பொலிஸ் அதிகாரி மிகேலா கெல்னர் மற்றும் அவரது தோழிகளிடமும் பத்திரிகை வேண்டுமா என கேட்டார். அவர்கள் வேண்டாம் என தெரிவித்தனர். இருந்தும் அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
அவனது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மிகேலா கெல்னர் தோழிகளிடம் அவர்களது பொருட்களையும், உடமைகளையும் கவனமாக பார்த்துக் கொள்ளும் படி கூறினார். அதற்குள் அந்த நபர் அங்கு வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.
உடனே சுதாரித்துக் கொண்ட கெல்னர் நீச்சல் உடையுடன் விரட்டிச் சென்று அந்த திருடனை மடக்கி கீழே தள்ளினார். இருந்தும் அவன் எழுந்து ஓட முயன்றான்.
இருந்தும் அவனை விடாமல் கட்டிப்புரண்டு சண்டை போட்டார். இறுதியில் அந்த திருடனை கைது செய்து அடித்து உதைத்து பொலிசில் ஒப்படைத்தார். இதற்கிடையே இக்காட்சியை சிலர் வீடியோ எடுத்து செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்.
இதனால் சுவீடனில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் மிகேலா கெல்னர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தனது 11 வருட பணியில் இது போன்று நிகழந்ததில்லை. நீச்சல் உடையில் திருடனை பிடித்தது புதிய அனுபவம். என்னுடன் மற்றொரு பொலிஸ் பெண் அதிகாரியும் இருந்தார் என தெரிவித்துள்ளார்.