தன்னுடைய பொருளை யாரும் தொடக்கூடாது என்ற பிடிவாத குணம், மற்றும் தைரியம், பாசத்துடன் வளர்ந்து வருகிறார் நாயகி ஸ்ரவியா. இவளது அப்பா சித்ரா லட்சுமணன் மகள் எது கேட்டாலும் அது செய்து கொடுக்க தயாராக இருக்கிறார். இந்நிலையில், ஸ்ரவியா பெயரில் ஒரு நிலத்தை வாங்கி, அதில் திருமண மண்டபம் கட்ட சித்ரா லட்சுமணன் முடிவு செய்கிறார்.
இதற்கிடையில், ஸ்ரவியா, ஒருவனை காதலிப்பதாகவும் அவனையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவிக்கிறாள். அவர்களும் மகளின் விருப்பத்திற்கேற்ப அவள் காதலித்தவனையே திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள். திருமணம் மண்டபம் கட்டும் பணி நடந்துகொண்டிருப்பதால், மண்டபம் கட்டி முடிந்ததும், தனது மகள் திருமணத்தை முதன்முதலாக அந்த மண்டபத்தில் நடத்த சித்ரா லட்சுமணன் முடிவு செய்கிறார்.
மண்டபமும் கட்டி முடிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. இந்நிலையில், ஸ்ரவியாவின் தாய்மாமனுக்கு அவளை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், வேறொருவனுடன் அவளுக்கு திருமணம் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாதவன், திருமணத்துக்கு முந்தைய நாள் மண்டபத்திற்கு தீவைத்து கொளுத்தி விடுகிறான்.
இந்த சம்பவத்தில் ஸ்ரவியா உள்ளிட்ட 13 பேர் அந்த மண்டபத்திலேயே இறந்துபோகிறார்கள். மண்டபமும் எரிந்து நாசமாகிறது. இதன்பின்னர் இறந்துபோன 13 பேரும் அந்த மண்படத்திற்குள்ளேயே ஆவியாக சுற்றுகிறார்கள். அங்கிருந்து அந்த ஆவிகளை விரட்டி, மண்டபத்தை புதுப்பிக்க பல்வேறு முயற்சிகள் செய்கிறார்கள் எதுவும் நடந்தபாடில்லை.
கடைசியாக மந்திரவாதி ஒருவர் ஒரு இளம் தம்பதிகளுக்கு அந்த மண்டபத்தில் திருமணம் செய்துவைத்தால் அந்த ஆவிகள் அனைத்தும் அங்கிருந்து ஓடிவிடும் என்று ஆலோசனை கூறுகிறார். அதன்படி, ஸ்ரவியாவின் அண்ணனான ராம்ஜி, நாயகன் ரத்தன் மௌலி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்டவர்களை மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கு நியமிக்கிறார்.
அங்கு சென்று அவர்கள் மண்டபத்தை புதுப்பித்து, திருமணத்தை நடத்தி ஆவிகளை விரட்டினார்களா? அல்லது அந்த ஆவிகள் இவர்களுக்கு எந்தமாதிரியான பிரச்சினையை கொடுத்தது? என்பதே மீதிக்கதை.
இயக்குனர் புகழ்மணியின் இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்த ‘13ம் பக்கம் பார்க்க’ படத்தின் ஹீரோ ரத்தன் மௌலிதான் இந்த படத்திற்கும் ஹீரோ. ஹீரோயிசம் இல்லாத ஒரு ஹீரோவாக இப்படத்தில் பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளிலும், ஆவிகளுக்கும் பயந்து நடுங்கும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதாநாயகி ஸ்ரவியாவுக்கு படத்தில் சிறப்பான கதாபாத்திரம். பிடிவாத குணம், துணிச்சலான பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆவியாக வரும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் சுஜாகுமார் இடைவேளைக்கு பிறகுதான் கதைக்குள் வருகிறார். கடைசி கட்டத்தில் இவருடைய நடிப்பும் மெச்சும்படியாக உள்ளது.
சிவாஜி ரசிகராக வரும் லிவிங்ஸ்டன், அவர் ஸ்டைலில் பேசி நடிக்கும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. மற்றபடி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், வையாபுரி, மனோபாலா என காமெடிக்கு நிறைய பேர் இருந்தாலும் பெரியதாக காமெடி ஒன்றும் இல்லை.
ஏற்கெனவே ஒரு பேய் படத்தை இயக்கி அனுபவமடைந்துள்ள இயக்குனர் புகழ்மணி மீண்டும் ஒரு பேய் படத்தை கொடுத்திருக்கிறார். தனது முந்தைய படத்திற்கும் இதற்கும் பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கிறார். நிறைய பேய் படங்களை பார்த்து அனுபவப்பட்டுவிட்ட நமக்கு, இந்த படத்தில் வரும் பேய்கள் பெரிதாக அச்சுறுத்தவில்லை. அதேபோல், காமெடியும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
தாஜ்நூரின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக பொருந்தியிருக்கிறது. பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி’ திகில் குறைவு.