இயக்குனர் மணிரத்னம் தற்போது கார்த்தியை வைத்து ‘காற்று வெளியிடை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பிலேயே தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மணிரத்னத்தின் சென்னை அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்துள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மணிரத்னத்தின் அலுவலகம் சென்னை அபிராமபுரத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் டப்பிங் தியேட்டர் ஒன்றை உருவாக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீ விபத்து அடைந்ததும் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.