தமிழில் பிரசாந்த் நடித்த ‘விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சினேகா. ஆனால், அந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால், அதன்பிறகு அவர் நடித்த ‘என்னவளே’, ‘ஆனந்தம்’ ஆகிய படங்கள் வெளிவந்து, அவரது முகத்தை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது.
அதன்பிறகு, கமல், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு ஆகியோருடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகள் பட்டியலில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே, நடிகர் பிரசன்னாவை காதலித்து, அவரை கரம்பிடித்தார்.
திருமணத்திற்கு பிறகும் சினேகா ‘ஹரிதாஸ்’, ‘உன் சமையலறையில்’ ஆகிய படங்களில் நடித்தார். அதன்பிறகு, சினேகா கர்ப்பமடையவே சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கினார். இந்நிலையில், கடந்த வருடம் பிரசன்னா-சினேகா தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு விகான் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அதன்பிறகு, எந்த படத்திலும், பொது நிகழ்ச்சிகளிலும் சினேகா முகம் காட்டவே இல்லை.
சினேகாவுக்கு குழந்தை பிறந்து ஒரு வருடங்கள் ஆன நிலையில், தற்போது திரையில் மீண்டும் தனது முகத்தை காட்ட தயாராகியிருக்கிறார். ஆனால், இம்முறை பெரிய திரையில் அல்ல, சின்னத்திரையில். அதாவது பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக சினேகா பங்கேற்கிறாராம். இந்த ரியாலிட்டி ஷோ விரைவில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.