பாராளுமன்றத்தில் நேற்று தொழிற்சாலை மசோதா-2016 தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது மத்திய தொழிலாளர் துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா பேசுகையில், தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை பெருக்கவும், தொழிலாளர்களை ஊக்குவிக்கவும் இந்த மசோதா பயனுள்ளதாக இருக்கும்.
கூடுதல் நேரம் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு நேரத்திற்கு ஏற்ப இரு மடங்கு சம்பளம் தர வேண்டும். அதற்காக கூடுதல் நேரம் பார்க்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. தொழிலாளர்கள் விரும்பினால் கூடுதல் நேரம் வேலை பார்க்கலாம். எனினும் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்கும் மிகாமலும், ஒரு வாரத்துக்கு 60 மணி நேரத்துக்கு மிகாமலும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதே சமயம் காலாண்டுக்கு கூடுதல் நேரம் 100 மணி நேரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றார்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தொழிற்சாலைகள் நசுக்கப்படும் என்றனர். எனினும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பா.ஜ.க. கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவுடன் இந்த மசோதா பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.