பெண்களுக்கான மகப்பேறு கால விடுமுறையை இரட்டிப்பாக்கும் மசோதாவிற்கு இந்திய நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதன் மூலம் 26 வாரங்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும். தற்போது, 12 வாரங்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்போர் அல்லது குழந்தையை தத்தெடுப்போருக்கும் இந்த விடுமுறை பொருந்துமாறு புதிய அம்சங்கள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களை நிறுவனங்கள் பணியில் அமர்த்தும் போது குழந்தைகள் பரமாரிப்பு வசதிகளை செய்துதர வேண்டும் என்ற அம்சமும் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தம் காரணமாக, மிகவும் திறமையான பெண்களை ஊக்கப்படுத்தி, குழந்தைப்பேறு காலத்துக்குப் பிறகும் பணிகளில் தொடர்வதற்கு வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இது நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக்க உதவும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது, சரிபாதி பெண்கள், குழந்தைகளை வளர்க்க தங்கள் பணியை விட்டு விலகுவது நடைமுறையாக உள்ளது.
இந்த மசோதாவுக்கு, நாடாளுமன்ற மக்களவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.