ஜெயலலிதா-முத்துராமன் நடித்து 1973-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம்´சூரியகாந்தி´. 150 நாட்களுக்கு மேல் ஓடிய இப்படம் தற்போது டிஜிட்டல் மற்றும் சினிமாஸ் கோப்பாக மாற்றப்பட்டு வருகிறது.
கணவனை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிறார் என்கிற தாழ்வு மனப்பான்மை பிடித்து ஆட்டும் ஈகோ தான் கதைக்களம். சோ, மனோரமா, மௌலி, காத்தாடி ராமமூர்த்தி, எம்.ஆர்.ஆர்.வாசு போன்றோர் நடித்திருக்கும் இப்படத்தில் “ஓ மேரோ தில்ரூபா´´, “நானென்றால் அது நீயும் நானும்´´ என்ற இரண்டு பாடல்களை ஜெயலலிதா சொந்தக் குரலில் பாடியிருந்தார்.
“பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?´´ என்ற காவியப்பாடல் இடம்பெற்ற படமும் இதுதான். படத்தின் கதை, வசனத்தை ஏ.எஸ்.பிரகாசம் எழுத, முக்தா வி.சீனிவாசன் படத்தை இயக்கி இருந்தார். பாடல்கள், படத்தின் கதை, சிறப்பான நடிப்பு, இசை என்று எல்லோராலும் பாராட்டு பெற்ற ´சூரியகாந்தி´ படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வெற்றி விழாவில் தந்தை பெரியார், ஜெயலலிதாவுக்கு பரிசு வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
43 வருடங்களை கடந்து 44-ம் வருடத்தில் அடியெடுத்து வைத்தாலும் ´சூரியகாந்தி´யின் கதைக்களம் எந்த கால கட்டத்திற்கும் பொருத்தமானதாக இருப்பதால் இன்றைய தலைமுறையினரையும் இப்படம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.