தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் பிலிம் சேம்பரில் இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் தாணு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, நடிகர்- நடிகைகள் சம்பள குறைப்பு தொடர்பான முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘கடந்த காலங்களில் கூட்டமைப்புடன கலந்து பேசி எடுத்த முடிவின்படி, எதிர்வரும் காலங்களில் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாத காரணத்தினால் இனிவரும் காலங்களில் சாட்டிலைட் ஒளிபரப்பை டெலிகாஸ்ட் அடிப்படையில் ஒளிபரப்பப்படும். பெருகி வரும் தயாரிப்பு செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் 50 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் ஆகியோர் 30 சதவீதம் அவர்களது சம்பளத்தினை குறைத்துக் கொள்ள வேண்டும்’ என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கூட்டமைப்புடன் பேசியதன் அடிப்படையில் சிறு முதலீட்டு திரைப்படங்களை குறிப்பிட்ட நாட்களில் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர்களுக்கு விரைவில் அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.