சென்னையில் நடிகர், நடிகைகளுக்கு கேரவன்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார் கவுண்டமணி. கூடவே, பிரச்சினையென்று வரும் காதல் ஜோடிகளுக்கு ரிஸ்க் எடுத்து திருமணமும் செய்து வைக்கிறார். இந்நிலையில், கவுண்டமணி மற்றும் அவரிடம் வேலை பார்க்கும் வேல்முருகன் உள்ளிட்டோர் சேர்ந்து கேரவனில் ஜாலியாக ஒரு டூர் செல்கிறார்கள்.
அதேநேரத்தில், மதுரையில் சமூக சேவகராக இருக்கும் சவுந்தர்ராஜா, அதே ஊரில் உள்ள அரசியல்வாதியின் மகளான ரித்விகாவை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே காதல் ஜோடிகள் மதுரையில் இருந்து கிளம்பி சென்னைக்கு வருகிறார்கள். அங்கு நண்பர் மூலமாக இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரசியல்வாதி தனது மகளை மீட்பதற்காக, ரவுடிகளை நியமிக்கிறார்கள். ரித்விகா சென்னையில் இருப்பதை அறிந்து அவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் காதல் ஜோடிகளை பார்க்கும் ரவுடி கும்பல் அவர்களை துரத்துகிறது. இந்த நேரத்தில் கவுண்டமணியின் கண்ணில் சவுந்தர்ராஜா-ரித்விகா ஜோடி படவே, அவர்களை ரவுடி கும்பலிடம் இருந்து காப்பாற்றி, அவர்களது காதலை சேர்த்துவைப்பதாக கூறி தனது கேரவனில் மதுரைக்கு அழைத்து செல்கிறார்.
மதுரைக்கு சென்ற அவர் சவுந்தர்ராஜா-ரித்விகா ஜோடியை சேர்ந்து வைத்தாரா? அல்லது அரசியல்வாதியின் பகைக்கு ஆளானாரா? என்பதே மீதிக்கதை.
கவுண்டமணி தனது கவுண்டர் வசனங்களால் படம் முழுக்க அனைவரையும் கலாய்த்திருக்கிறார். ‘விஷால் நடிக்கும் படமா, பின்னி மில்லுக்கு கேரவனை அனுப்பு’, ‘கவுதம் மேனன் இயக்கும் படமாக ஈசிஆர் ரோட்டில் உள்ள காபி ஷாப்புக்கு அனுப்பு’ என்று தமிழ் சினிமாவில் உள்ள விஷங்களை மட்டுமில்லாது, அரசியலில் உள்ள கேலிக்கூத்துக்களையும், மக்களின் மூட நம்பிக்கைகளையும் தனது பாணியில் கிண்டலடித்து படம் முழுக்க சிரிக்க வைத்திருக்கிறார். ரஜினிக்கு வயதானாலும் அவரோட ஸ்டைல் இன்னமும் எப்படி மாறவில்லையோ, அதேமாதிரி, கவுண்டமணிக்கு வயதானலும், இவரோட கவுண்டர் வசனங்களுக்கு இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது என்பதை இப்படத்தில் மறுபடியும் நிரூபித்திருக்கிறார்.
இதுவரையிலான படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த சவுந்தர்ராஜன், இப்படத்தில் சமூக சேவகராக வருகிறார். காதல் காட்சிகளிலும், சென்டிமெண்ட் காட்சிகளிலும் இன்னும் கொஞ்சம் நடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கோபப்படும் காட்சிகளில் இவருடைய நடிப்பு சூப்பர்.
கவுண்டமணியின் மனைவியாக வரும் சனா, கணவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்து நடுங்கும் காட்சிகளில் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார். ரித்விகா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். அரசியல்வாதியாக வரும் ரமேஷ், அவரின் அன்பு தம்பியாக வரும் வளவன், கவுண்டமணியிடம் வேலை பார்க்கும் பாடகர் வேல்முருகன் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தில் எந்தவொரு லாஜிக் விஷயங்களையும் பார்க்காமல் படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைத்தால் மட்டும் போதும் என்று எண்ணி படத்தை எடுத்திருக்கிறார் கணபதி பாலமுருகன். கவுண்டமணி வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பை கொடுத்திருக்கிறது. இருந்தாலும், இடைவிடாமல், தொடர்ந்து அவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் சில இடத்தில் சலிப்பைத்தான் கொடுக்கிறது. சவுந்தர்ராஜா-ரித்விகா காதல் காட்சிகளும் படத்திற்கு தொய்வை கொடுத்திருக்கின்றன.
அதேபோல், கண்ணனின் ஒளிப்பதிவும், அருணகிரியின் இசையும் படத்திற்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
மொத்தத்தில் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ ஒருமுறை பார்க்கலாம்.