மும்பையை சேர்ந்த பிரபல பெருநிறுவன வக்கீல் பல்லவி புர்கயஸ்தா கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் சஜ்ஜத் மோகல். நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பரோலில் வெளியே வந்தார். பின்னர், பரோல் காலம் முடிந்ததும் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகி விட்டார்.
மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் குற்றவாளி என்று நிரூபணமாகி, தண்டனை விதிக்கப்பட்ட நபர், பரோல் விதிமுறைகளை மீறி தப்பிச்சென்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மாநில உள்துறையை பல்வேறு தரப்பினரும் கடுமையாக சாடினர்.
இந்த நிலையில், தீவிர குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் பரோலில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு சட்ட திருத்தத்தை மாநில அரசு கொண்டு வருகிறது. இதற்காக சிறை விதிகளில் மாற்றம் செய்து, அது தொடர்பான அறிவிக்கையை மாநில அரசு நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
திருத்தப்பட்ட சட்ட விதிமுறையின்கீழ் பாலியல் பலாத்கபரம், கொலை, பாலியல் பலாத்கபரத்துடன் கூடிய கொலை, போதைப்பொருள் கடத்தல், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் கைதாகி தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இனிமேல் வழக்கமான பரோலில் வெளியே வர முடியாது.
மேலும், தண்டனையை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தாலோ அல்லது அவர் மீது மத்திய, மாநில அரசு ஏதாவது நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருந்தாலோ, அவருக்கு கோர்ட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டால், அவர் ‘பர்லோ’ என்னும் விடுப்பில் செல்ல முடியாது.
இதேபோல், மருத்துவ அறிக்கையின்படி, மனதளவில் கைதிகள் ஆரோக்கியமற்றவர்களாக இருந்தால், விடுப்பு வழங்கப்பட மாட்டாது. தவிர கொள்ளை, ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், பாலியல் பலாத்கபரம், பாலியல் பலாத்கபரத்துடன் கூடிய கொலை மற்றும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கும் ‘பர்லோ’ என்னும் விடுப்பு வழங்கப்படாது.
அதேசமயம் கைதிகளின் தாத்தா, பாட்டி, தந்தை, தாயார், மனைவி, மகன், மகள், சகோதரர் அல்லது சகோதரி ஆகியோரது இறப்பின்போது ‘அவசரகால பரோலில்’ கைதிகள் வெளியே வரலாம். மேற்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்படும் சமயங்களிலும், இந்த விடுப்பின்கீழ் கைதிகள் வெளியே வரலாம். இவ்வாறு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.