நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-
“பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கிறார்கள். ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கிறார்கள். சில பெண்கள் ஆண்களை விட அதிகமாகவும் சம்பாதிக்கிறார்கள். எனவே பெண்கள் விஷயத்தில் ஆண்கள் தங்களது எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இன்னும் பழைய மாதிரி அவர்களை வீட்டு நிர்வாகத்தை பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டும் என்று அடக்கி வைக்கக் கூடாது.
பெண்கள் சம்பாதிக்கும் இன்றைய கால கட்டத்தில் வீட்டு வேலைகளை அவர்கள்தான் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? வீட்டு வேலைகளை ஆண்களும் செய்ய முன்வர வேண்டும். பெண்கள்தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று சொல்லும் ஆண்களை எனக்கு சுத்தமாக பிடிக்காது. சில ஆண்கள் வாழ்க்கை துணைவிக்கு கஷ்டத்தை கொடுக்கிறார்கள். இந்த நிலைமைகள் மாறவேண்டும்.
உங்களுக்கு காதல் அனுபவம் இருக்கிறதா? என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இதுவரை காதலிக்கவில்லை. காதல் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இனிமையான அனுபவம். அதை அனுபவிப்பதற்காக இனிமேல் காதலிக்கலாம் என்று இருக்கிறேன். காதலிப்பதற்கு எனக்கு ராஜகுமாரன் தேவை இல்லை. சரியான ஜோடியாக இருந்தால் போதும். அவர் சாதாரணமானவராக இருந்தாலும் ஆட்சேபனை இல்லை.
என் எண்ணங்களையும் கருத்துக்களையும் நேசிப்பவராக அவர் இருக்க வேண் டும். என்மீது முழு நம்பிக்கை வைத்து இருக்க வேண்டும். அவரது சொந்த வாழ்க்கையை விட என் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். எப்போதும் நான் அவரைப்பற்றியே யோசிக்கும் அளவுக்கு எனது மனதில் இடம் பிடிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒருவரை காதலிப்பேன்.
காதல் என்ற உறவு சாதாரணமானது அல்ல. எனவேதான் அதில் கவனமாக இருக்கிறேன். சினிமா நடிகையாக இருந்தாலும் நானும் சாதாரணமான பெண்தான். சாதாரண பெண்களுக்கு இருக்கும் கனவுகள் எனக்கும் இருக்கிறது. சினிமாவில் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்துக்கொண்டு இருக்கிறேன். சவாலான வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். கதை தேர்வில் எனது மனது சொன்னதை கேட்பேன். ஒரு படத்தில் நடித்து முடித்த கதாபாத்திரத்தை இன்னும் நன்றாக செய்து இருக்கலாமோ என்று சிந்திக்க மாட்டேன். அதனால்தான் படங்கள் தோல்வி அடைந்தாலும் அது என்னை பாதிப்பது இல்லை.” இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.