மராட்டிய மாநிலத்தில் குளத்தில் பூஜை செய்த சிறுமிகள் உள்பட 6 பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலியான பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் ஹிங்கானா தாலுகாவில் தேவ்ளி-சாவங்கி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்குவதையொட்டி விரதம் மேற்கொண்டு வந்தனர். இவ்வாறு விரதம் இருந்த அந்த பகுதியை சேர்ந்த மந்தாதாயி நாகோசே (வயது45), பிரியா ராவுத் (17), ஜானவி (13), பூஜா ரத்தன் (17), பூனம் துல்சிராம் (18), பிரனாலி ராவுத் (16) ஆகியோர் சம்பவத்தன்று அங்குள்ள குளத்திற்கு பூஜை செய்ய சென்றனர்.
அவர்கள் 6 பேரும் குளத்தின் கரையில் பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் 4 பெண்கள் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். இதில் அவர்கள் 4 பேரும் தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் தத்தளித்தனர். பின்னர் ஒருவர்பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் குளித்து கொண்டிருந்த மற்ற 2 பேர் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இதுபற்றி தகவல் அறிந்த அந்த கிராம மக்கள் குளத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி 6 பேரையும் மயங்கிய நிலையில் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்களை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டொக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவர்கள் 6 பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிகள் உள்பட 6 பெண்கள் பலியானது அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.