நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சுஜிபாலா. இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
அதைத் தொடர்ந்து டைரக்டர் பி.சி. அன்பழகன் இயக்கிய ´அய்யாவழி´ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். மேலும் ´முத்துக்குமுத்தாக´, ´சந்திரமுகி´, ´கோரிபாளையம்´ போன்ற பல படங்களில் சுஜிபாலா நடித்தார். தொலைக்காட்சியிலும் பல நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து நடித்து வந்தார்.
நடிகை சுஜிபாலாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி ஊட்டியை சேர்ந்த பிரனேஷ் மாப்பிள்ளையாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து விட்டு கத்தார் நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
நடிகை சுஜிபாலா- பிரனேஷ் திருமணம் இன்று நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடந்தது. நடிகை சுஜிபாலா கிறிஸ்தவ முறைப்படி வெள்ளை நிற திருமண ஆடையை அணிந்திருந்தார். மணமகன் பிரனேஷ் கோட்-சூட் அணிந்திருந்தார்.
பங்கு தந்தை லியோன் கென்சன் இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். நடிகை சுஜிபாலா கழுத்தில் பிரனேஷ் தாலி கட்டியதும் திருமணத்தில் பங்கேற்ற உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.