நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இருவரும் ஒரு படத்தில் ஜோடியாக நடித்தபோது நெருக்கமாகி காதல் வயப்பட்டார்கள். இந்த காதலை சமந்தா சமீபத்தில் அறிவித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.
இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் காதலுக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக சுற்றும் படங்கள் இணையதளங்களில் தற்போது பரவி வருகின்றன. நாகார்ஜுனாவின் இன்னொரு மகனான அகிலும் காதலில் சிக்கி உள்ளார்.
இதுகுறித்து நாகார்ஜுனா ஏற்கனவே கருத்து சொல்லும்போது, “எனது மகன்கள் அவர்களின் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய முழு உரிமை அளித்து இருக்கிறேன். அவர்கள் விருப்பங்களில் குறுக்கிட மாட்டேன்” என்றார். இதைத் தொடர்ந்து இரண்டு மகன்களின் திருமணத்தையும் அவர் ஒரே மேடையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் பரவியது.
இந்த நிலையில், ஐதாராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நாகார்ஜுனாவிடம், நாகசைதன்யா திருமணம் எப்போது நடைபெறும்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், “திருமண தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் அறிவிப்பேன்” என்று கூறினார். இந்த வருடம் இறுதியில் சமந்தா-நாகசைதன்யா நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது.
திருமணத்துக்கு பிறகு சமந்தா சினிமாவை விட்டு விலகுவார் என்று கூறப்படுகிறது. சமந்தா 2010-ல் சினிமாவில் அறிமுகமானார். விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.