நாயகன் கரண் ஒரு டாக்சி டிரைவர். ஒருநாள் இரவு இவர் சவாரியை இறக்கிவிட்டு காரில் சென்று கொண்டிருக்கும் நிலையில், நாயகி நேகா ரத்னாகரன் மணக்கோலத்தில் ஒருவருடன் நடுரோட்டில் ஓடி வந்துகொண்டிருக்கிறாள். அவர்களை ஒரு ரவுடி கும்பல் துரத்தி வருகிறது. அப்போது, நேகாவுடன் வந்தவரை அந்த ரவுடி கும்பல் சுட்டு வீழ்த்துகிறது. அத்தோடு, ரவுடி கும்பல் வந்த காரும் விபத்துக்குள்ளாகி, அதில் உள்ள அனைவரும் இறக்கிறார்கள்.
அப்போது அந்த வழியில் வந்த கரண், இதையெல்லாம் பார்த்து அவளை தனது காரில் ஏற்றி அழைத்து செல்கிறார். அப்போது கரணிடம், நாயகி நேகா அப்பாவின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால், ரவுடிகளை வைத்து தன்னை கொலை செய்ய அவரது அப்பா முயற்சி செய்கிறார் என்று கூறுகிறாள்.
இதனால், அவளை காப்பாற்றுவதற்காக அவளை தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு சுற்றி வருகிறார். குண்டு பாய்ந்து இறந்துபோன நேகாவின் காதல் கணவரும், அவனை சுட்டுக் கொன்ற ரவுடி கும்பலும் ஒரே இடத்தில் இறந்து கிடப்பதை பார்க்கும் போலீசார் இதற்கெல்லாம் யார் காரணம்? என்பதை அறிய தீவிர விசாரணையில் இறங்குகிறார்கள்.
அவளை காரில் வைத்து சுற்றி வரும்போதே அவள்மீது காதல் கொள்கிறார் நாயகன் கரண். இந்நிலையில், இவர்கள் பயணிக்கும் காரில் நேகாவின் திருமணத்துக்கு உறுதுணையாக இருந்த அவளது அண்ணனும் ஏறிக் கொள்கிறார். இதையறிந்த, நரேன் மற்றும் அவரது கூட்டாளிகள் இவர்களுடைய காரை துரத்துகிறார்கள். அப்போது, நேகாவின் அண்ணன் மட்டும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட நினைக்கிறார். அவனை துரத்தும் ரவுடி கும்பல் அவனை சுட்டு வீழ்த்துகிறது.
இதையெல்லாம் பார்த்து இவர்களிடமிருந்து நாயகியை காப்பாற்ற போலீசாரிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் சொல்ல முடிவெடுக்கிறார். ஆனால், நாயகியோ இதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள். இறுதியில், நரேன் மற்றும் அவரது கூட்டாளிகளிடமிருந்து நாயகியை கரண் எப்படி காப்பாற்றினார்? போலீசிடம் செல்ல ஏன் நாயகி தயங்குகிறாள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் கரண் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவரும் படம் என்பதால், இப்படம் கரணுக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது. அதை உணர்ந்து இந்த படத்தில் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கரண். படத்தில் பார்க்கும்போது இன்னும் கொஞ்சம் இளமையாகவே தெரிகிறார்.
நாயகி நேகா ரத்னாகரனை சுற்றித்தான் கதையே நகர்கிறது. சென்டிமென்ட் காட்சிகள், உருக்கமான காட்சிகளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக நரேன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். கோவை சரளாவின் குரல் மட்டுமே படத்தில் ஒலிக்கிறது. இருப்பினும், குரலிலேயே அவரது முத்திரையை தனியாக பதித்து விடுகிறார்.
மற்றபடி, படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்கள் காமெடி என்ற பெயரில் கடுப்பைத்தான் வரவழைத்திருக்கின்றன. ஒருநாள் இரவிலேயே நடக்கும் கதையை விறுவிறுப்பாக சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர் ஜேப்பி. ஆனால், விறுவிறுப்பான திரைக்கதை இல்லாதது பெரிய குறை. கார் சேசிங், ரவுடி கும்பலிடம் இருந்து தப்பிப்பது இந்த மாதிரியான காட்சிகள் வைத்தாலே விறுவிறுப்பாகிவிடும் என்று தப்பு கணக்கு போட்டிருக்கிறார்.
வித்யாசாகர் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது. ஹார்முக் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலமாக இருந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘உச்சத்துல சிவா’ உச்சம் தொடவில்லை.