சமீபத்தில் சென்னையில் அதிகாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதியதில் 13 ஆட்டோக்கள் சேதம் அடைந்தது. அதில் ஆட்டோக்களில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் 9 ஆட்டோ ஓட்டுனர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
அவர்களில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, அக்குர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் அவர்களுடைய குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது இறந்த ஆறுமுகத்துக்கு மணிஷா என்ற 7-வயது மகள் இருப்பதை அறிந்தார். உடனே மணிஷாவின் கல்விச் செலவு அனைத்தையும் தனது தேவி அறக்கட்டளை பொறுப்பேற்று கொள்வதாக கூறி அவர்களுக்கு ஆறுதல் கூறி சமாதானம் அடைய வைத்தார். ஆறுமுகத்தின் குடும்பத்தினரும் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.