இந்தியா முதன்முதலாக 1932-ம் ஆண்டு ஜூன் 25-ந் திகதி சி.கே நாயுடு தலைமையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடியெடுத்து வைத்தது. இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் விளையாடியது. அதில் இருந்து சுமார் 84 ஆண்டுகள் கழித்து இன்று 500-வது டெஸ்டை தொட்டுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் க்ரீன் பார்க்கில் இந்தியா தனது 500-வது டெஸ்டை நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடி வருகிறது.
இந்த டெஸ்டை சிறப்பாக கொண்டாடும் வகையில் முன்னாள் டெஸ்ட் அணி தலைவர்கள் அனைவரையும் பி.சி.சி.ஐ. சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது. கபில்தேவ், திலிப் வெங்சர்க்கார், ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி, சவுரவ் கங்குலி, டோனி உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது டெஸ்ட் போட்டிகள் குறித்தும், தற்போது டெஸ்ட் போட்டியைக் காண் ரசிகர்கள் குறைவான அளவில் வருவது குறித்தும், பகல் – இரவு டெஸ்ட் போட்டி குறித்தும் பேசப்பட்டது.
இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பேசும்போது, ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற ‘பிங்க் பால் (பகல்- இரவு டெஸ்ட்)’ சிறந்த வழியல்ல” என்று கூறினார்.
மேலும், ‘‘தனிப்பட்ட முறையில் நான் பிங்க் பாலில் விளையாடும் யோசனையை விரும்பவில்லை. அதற்காக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், பிங்க் பால் சிறந்த யோசனையில்லை என்பது என் கருத்து.
மாலை நேர பனியில் ‘பிங்க் பால்’ எப்படி செயல்படும் என்று என்னால் உறுதியாக கூற இயலாது. ஆடுகளங்கள் உலகம் முழுவதும் மாறுபட்ட இடங்களில் மாறுபட்ட வழிகளில் செயல்பட்டு வருகின்றன. சூரியன் மறையும் நேரத்தில், அதாவது மாலை நேரத்தில் டர்பன் போன்ற ஆடுகளத்தின் மேற்பரப்பு முற்றிலும் மாறுபட்டது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான வகையில் ஆடுகளத்தை தயார் செய்தால் அது சிறந்த வழியாக இருக்கும்’’ என்றார் சச்சின்.
சச்சின் தெண்டுல்கரின் இந்த கருத்தை ரவி சாஸ்திரி ஏற்றுக்கொண்டார். மேலும் ‘‘பனி முக்கிய காரணியாக இருக்கும். பந்து வீச்சு – பேட்டிங் ஆகியவற்றை சரிசமமாக கொண்டுவருவது சிறந்த வழியாகும்’’ என்றார்.