மூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவான முதல் குழந்தை பிரசவிக்கப்பட்டிருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது.
இந்த அறிவிப்பு ´நியூ சையண்டிஸ்ட்´ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது.
இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் பிறந்த ஐந்து மாத ஆண் குழந்தைக்கு, அதன் தாய் மற்றும் தந்தையிடமிருந்து கிடைக்கும் வழக்கமான மரபணுவைத் தவிர, கூடுதலாக ஒரு மரபணுக் கொடையாளியிடமிருந்த சிறிய ஒரு மரபணுக் குறியீடும் கிடைத்திருக்கிறது.
அந்தக் குழந்தையின் ஜோர்டானியத் தாயின் மரபணுவில் இருக்கும் ஒரு பிரச்சனை குழந்தைக்கு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த முன்னெப்போதும் செய்திராத நடவடிக்கையை அமெரிக்க மருத்துவர்கள் எடுத்தனர்.
இந்த சிகிச்சை முறை மருத்துவத்தில் புதியதொரு சகாப்தத்தை உருவாவதைக் காட்டுகிறது என்றும், இதே போன்று அபூர்வ மரபணு பிரச்சனைகள் கொண்ட குடும்பங்களுக்கு இது உதவும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனால் `மிட்டொகோண்ட்ரியல்` நன்கொடை (mitochondrial donation) என்றழைக்கப்படும் இந்த சர்ச்சைக்குரிய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமுன், கடுமையான சோதனைகள் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.