காஷ்மீர் மாநிலம் உரியில் இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய மொழி படங்களில் நடிக்க தடை விதித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர் சல்மான்கான், கரண் ஜோகர், அனுராக் காஷ்யப், ஓம் புரி மற்றும் நடிகை ராதிகா ஆப்தே ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நடிகையும், பாரதீய ஜனதா எம்.பி.யும் ஆன ஹேம மாலினி டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நாட்டுக்காக போராடும், உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுடன் நூறு சதவீதம் நான் இருப்பேன். ஒரு நடிகையாக அவர்களது (பாகிஸ்தான் நடிகர்கள்) நடிப்பை பாராட்டுகிறேன். ஆனால், பாகிஸ்தான் நடிகர்கள் இங்கு வந்து நடிப்பதற்கு நான் ஆதரவு அளிக்க மாட்டேன்.
அவர்கள் நல்ல நடிகர்கள் தான். இந்திய மொழி படங்களில் அவர்கள் நன்றாக தான் நடிக்கிறார்கள். ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வருவது துரதிருஷ்டவசமானது. சமீபத்தில் நடந்த ‘சர்ஜிக்கல்’ தாக்குதல் பற்றி ஆதாரம் கேட்பது விரும்பத்தகாதது. இவ்வாறு ஹேமமாலினி தெரிவித்தார்.