தமிழில் ‘குறும்பு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிகிதா. தொடர்ந்து, சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘கோடான கோடி’ படத்தில் இவர் ஆடிய நடனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நிகிதாவுக்கும் மும்பை தொழிலதிபருமான ககன்தீப் சிங்கும் விரைவில் திருமணம் நடைபெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ககன்தீப் சிங் இளைஞர் காங்கிரசின் முன்னாள் துணை தலைவராக பணியாற்றிய மஹிந்தர் சிங் மாகோவின் மகனாவார்.
இதுகுறித்து நிகிதா கூறும்போது, கடந்த டிசம்பர் மாதம் எனது உறவுக்காரர் திருமணத்தின்போது ககந்தீப்பை சந்தித்தேன். என்னை பார்த்தவுடன் அவர் காதலில் விழுந்தார். என் தங்கை வழியாக அவர் என்னிடம் பேச ஆரம்பித்தார். 3 நாள்கள் கழித்து என்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது, சென்னையிலிருந்த நான் உடனே மும்பைக்குத் திரும்பினேன். அப்போது ஒரு வேலையாக சென்னை வந்திருந்த ககனும் என்னுடன் துணைக்கு வந்தார்.
அப்போது என்னுடைய நடவடிக்கைகளால் வியந்துபோன ககன், அன்றே என்னிடம் காதலைத் தெரிவித்தார். பெற்றோர் சம்மதத்துடன் எங்களது திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் நடிப்பில் கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளார்.
நிகிதா-ககன்தீப் சிங் திருமண கொண்டாட்டங்கள் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.