மலையாள திரையுலகில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீலதாமேனன்.‘மிஸ் திருவனந்தபுரம்‘ பட்டமும் பெற்றிருந்த இவர், 200-க்கும் மேற்பட்ட டெலிவிஷன் தொடர்களில் நடித்தார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் உச்சத்தில் இருந்தபோது திடீரென உடல்நலம் பாதிக்கப் பட்டு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார்.
ஸ்ரீலதாமேனனை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு அரிய வகை எலும்பு நோய் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.நோய் பாதிப்பு ஏற்பட்டதால் திரையுலகில் இருந்து விலகிய ஸ்ரீலதாமேனன் ஆஸ்பத்திரியில் தங்கி தொடர் சிகிச்சை பெற்றுக் கொண்டார். ஆண்டுகள் பல கழிந்த பின்பும் இவருக்கு நோய் குணமாகவில்லை. ஏராளமான பணம் செலவு செய்ததால் நெருக்கடிக்கு ஆளானார்.
இந்த தகவல் அப்போதைய முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கு தெரிய வந்தது. அவர், ஸ்ரீலதாமேனன் மருத்துவச் செலவுக்கு உதவிசெய்தார். இதுபோல மலையாள நடிகர் சங்கமான அம்மாவும், ஸ்ரீலதா மருத்துவத்துக்கு பண உதவி செய்தது.
பலரது உதவியில் நடிகை ஸ்ரீலதாமேனன் 23 ஆண்டுகள் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் அவருக்கு பூரண சுகம் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இவரது உயிர் பிரிந்தது. இறந்து போன ஸ்ரீலதா மேனனுக்கு 47 வயது ஆகிறது. இவரது கணவர் மது ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.