நடிகை சமந்தாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை அவர் மணக்கிறார். இந்த வருடம் இறுதியில் நிச்சயதார்த்தமும், அடுத்த வருடம் திருமணமும் நடக்க உள்ளது. திருமண ஏற்பாடுகளில் இரண்டு பேரின் பெற்றோர் களும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முகூர்த்தம் நடக்க உள்ளது.
சென்னையில் திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். அவரது உறவினர்கள் பலரும் சினிமாவில் வசதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஐதராபாத்தில் பெரிய தொழில் நிறுவனங்களும், சினிமா ஸ்டூடியோக்களும் உள்ளன. எனவே திருமண விழாவை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நடிகை சமந்தாவிடம் உங்கள் திருமணத்தை எப்படி நடத்தப்போகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து சமந்தா கூறியதாவது:-
“பிறந்த நாள் மற்றும் திருமண விழா ஆகிய இரண்டையும் விட சிறப்பானது எதுவும் இல்லை. எல்லோருமே இந்த விழாக்களை விமரிசையாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடவே விரும்புவார்கள். ஆனால் எனக்கு பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது. பிறந்த நாளை ஆர்ப்பாட்டமாக கொண்டாடும் அளவுக்கு நாம் என்ன சாதித்து விட்டோம் என்று நினைத்துக்கொள்வேன்.
தோழிகளும், சினேகிதர்களும் எனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட ஆசைப்படுவார்கள். என்னிடம் சொல்லாமலேயே பரிசு பொருட்களை வாங்கி வந்து சந்தோஷப்படுத்த முயற்சிப்பார்கள். ஆனாலும் எனக்கு அதில் மகிழ்ச்சி ஏற்படாது. அவர்கள் செயல்களில் நாடகத்தனம் இருப்பதுபோல்தான் தோன்றும்.
ஆனால் தோழிகளுடைய பிறந்த நாளை சந்தோஷமாக கொண்டாடுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. அன்றைய நாளை அவர்களுடன் இருந்து ஜாலியாக கழிப்பேன். திருமணத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதிலும் நான் எந்த திட்டமும் வைத்துக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் என்ன நினைக்கிறேனோ அதன்படி நடக்கும்.” இவ்வாறு சமந்தா கூறினார்.