டெல்லியில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.
நாணய சுழற்சி வென்ற இந்திய அணி தலைவர் டோனி களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து கேன் வில்லியம்சனின் சதத்தால் 242 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் விளையாடிய இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 18.4 வது ஓவரில் ரகானே ஆட்டமிழந்த பிறகு 5-வது விக்கெட்டுக்கு தலைவர் தோனி களமிறங்கினார். போட்டி சீராக சென்று கொண்டிருந்த நிலையில் டோனி 65 பந்துகளை சந்தித்த நிலையில் 39 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டம் இழந்தார்.
இந்நிலையில் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தோனி தான் அடித்து விளையாட நினைக்கும் பொழுதெல்லாம் மறுமுனையில் விக்கெட் விழுகிறது கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது:- நான் மேலும் சில ஷாட்களை அடித்து விளையாட விரும்பினேன். ஆனால் மறு முனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தால் அது சாத்தியமில்லை. அப்போது மேலும் நீங்கள் வலுவான பார்ட்னர் ஷிப்பை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.
இது ஒரு சாதாரண ஓட்டங்கள் தான். யாராவது ஒரு பேட்ஸ்மேன் மேலும் 15 நிமிடம் விளையாடி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்.
பந்துவீச்சின் போது வில்லியம்சனின் இரண்டு கேச்சுகளை தவறவிட்டோம். இருப்பினும் 242 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி. இவ்வாறு தெரிவித்தார்.